search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Shivratri Veera"

    • இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை, சிவராத்திரி.
    • சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.

    இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை. சிவராத்திரி. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவ நாமஜெபம், சிவ தியானம், சிவபஜனை, சிவதரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால், மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

    சிவாலயத்தில் பலிபீடத்துக்கு அருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

    கிழக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.

    உபவாசம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு. அனேகமாக அனைத்து சமயநூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

    உண்ணாநோன்பு என்பது உயிருக்கும் மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை எல்லாம் உண்ணாநோன்பு வெளியேற்றுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

    சிவராத்திரியின் நோக்கம் என்னவென்றால் ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மவுனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். அக விழிப்புணர்வைத் தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும்.

    இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை. 108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜை செய்வது கோடி அர்ச்சனை. சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவாப் பேரின்பநிலை பிறக்கும்.

    ×