என் மலர்
நீங்கள் தேடியது "luxury cruise ship"
- அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அந்த சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது.
- தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான குனார்ட் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் இயக்கப்படும் சொகுசு கப்பல்களில் குயின் மேரி 2 ஒன்றாகும். இந்த ராட்சத சொகுசு கப்பலில் அதிநவீன சொகுசு அறைகள், பிரமாண்ட நீச்சல் குளம், திரையரங்கம், நூலகம், கேசினோ உள்ளிட்ட சகல வசதிகளும் அமைக்க பெற்றுள்ளது.
உலகில் உள்ள சொகுசு கப்பல்களில் மிகவும் ஆடம்பரமான சொகுசு கப்பல் என குயின் மேரி 2 வர்ணிக்கப்படுகிறது. மேலும் இதனை மிதக்கும் சொர்க்கம் என சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
இந்த சொகுசு கப்பல், கரீபியன் தீவு நாடுகளில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் வழியாக இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் நகருக்கு இயக்கப்பட்டது. இந்த கப்பலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், கப்பல் கேப்டன் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பயணித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அந்த சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் இருந்த பலருக்கு 'நோரோ' என்னும் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தொற்று பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு என தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
- வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்லும்.
- இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது.
வாரணாசி :
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
'கங்கா விலாஸ்' எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் செல்கிறது.
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. எனினும் இந்த தொடக்க விழாவுக்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.
வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும்.
50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.
மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்கும் இந்த ஆடம்பர சொகுசு கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் அடங்கி உள்ளன.
குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது. இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






