என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal lake"

    • மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஏரியில் சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நவீன நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் நகர மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோரது முயற்சியின் அடிப்படையில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரியில் சுமார் ரூ.24 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே நகராட்சியால் நடத்தப்பட்டு வரும் படகு இல்லத்திற்கு 75 புதிய படகுகள் வாங்கப்பட உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் சென்று ஏறுவதற்காக நவீன முறையில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதில் நடந்து கொண்டே சுற்றுலா பயணிகள் படகில் ஏறவும், நட்சத்திர ஏரியை கண்டுகளி்க்கவும் முடியும். சுமார் 500 மீட்டர் தூரம் ஏரியில் நடந்து செல்வ தற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியின் இந்த முயற்சி பல்வேறு தரப்பினர் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.

    அத்துடன் நகரில் உள்ள பொதுமக்கள் இந்த நடைமேடை அமைப்பதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் ஏரியை சுற்றி பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. அத்துடன் இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் இரவு நேரத்திலும் படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றனர்.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.

    தற்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்துள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும் கொடைக்கானலை நோக்கி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியின் நடுவே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதன் அருகே செல்லும்போது ஷவர் பாத்தில் குளிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

    குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே படகில் குழுவாக சென்று இதுபோன்ற குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குணா குகை பகுதியிலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதன் அருகே நின்று குணா படத்தில் வரும் பாடலை பாடி சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா இடங்களான தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் ஏரியில் வீசப்பட்டு வந்தன.
    • சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும். 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரி கடந்த 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் சுற்றிப்பார்ப்பதற்காக படகு சவாரியும் செய்யப்பட்டுள்ளது. 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஒட்டி 5 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டு அதில் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏரி சுதந்திரத்துக்கு பிறகு ஏரியின் உரிமை 1950ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டது.

    பின்னர் கொடைக்கானல் நகராட்சி வசம் ஏரி ஒப்படைக்கப்பட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி படகு சவாரி செய்யும் இடமாக இருப்பதால் அனைத்து நாட்களிலும் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். சீசன் காலங்களில் இங்கு படகு போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    சுற்றுலா தலமான கொடைக்கானலில் மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது. இதனை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையிலேயே திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் மூலம் உள்ளூர் குடிமகன்கள் காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்து பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் ஏரியை சுற்றி மது அருந்தும் குடிமகன்கள் பாட்டில்களை ஏரியில் வீசிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் சேர்வதால் மாசடைந்து வந்தது. தினந்தோறும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சாலையோரம் கிடக்கும் மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் ஏரியை தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியாக நகராட்சி சார்பில் 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் 6 டன் அளவுக்கு காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஏரியை சுற்றி அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள் பாட்டிலை ஏரியில் வீசிச் சென்று விடுகின்றனர். மேலும் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    அது போன்ற நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த போதிலும் முழுமையாக தடுக்க முடிவதில்லை. இது குறித்து நகராட்சி ஆணையர் சத்தியநாதன் தெரிவிக்கையில், காலி மது பாட்டிலை அகற்றுவது சவாலான பிரச்சனையாக உள்ளது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விடுதி அறைகளில் வைத்து மது குடிப்பதோடு தாங்கள் சுற்றிப்பார்க்கும் இடங்களிலும் அதனை ரகசியமாக எடுத்து வந்து குடிக்கின்றனர்.

    நகராட்சி சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டு ஏரியில் இருந்து கடந்த மாதங்களில் மட்டும் 6 டன் மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் காலி மதுபாட்டில்கள் ஏரியில் கிடக்கும் என்று நம்புகிறோம். அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். 

    • கொடைக்கானலில் மதியவேளையில் க‌ருமேக‌ங்க‌ள் சூழ்ந்து சுமார் 2 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மித‌மான‌ ம‌ழை பெய்தது.
    • ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

    கொடைக்கானல்:

    த‌மிழ‌க‌த்தின் பெரும்பாலான‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌ வாய்ப்புள்ள‌தாக‌ சென்னை வானிலை மைய‌ம் அறிவித்திருந்த‌து. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை மித‌மான‌ வெப்ப‌ம் நில‌வி வ‌ந்த‌ நிலையில் மதியவேளையில் க‌ருமேக‌ங்க‌ள் சூழ்ந்து சுமார் 2 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மித‌மான‌ ம‌ழை பெய்தது.

    குறிப்பாக‌ அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்க‌ல், அண்ணாசாலை, உகார்த்தேந‌க‌ர், செண்ப‌க‌னூர், நாயுடுபுர‌ம் உள்ளிட்ட‌ பல்வேறு பகுதிகளில் ம‌ழை தொட‌ர்ந்து பெய்து வருவதால் நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து ஏரியில் இருந்து மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தொட‌ர் ம‌ழை கார‌ண‌மாக‌ ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளுமையான‌ சூழ‌ல் நில‌வி வ‌ருகின்ற‌து.

    கொடைக்கானலில் கன மழையால் ஏரி உடைந்து 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். #Gajastorm

    கொடைக்கானல்:

    கொடைக்கானலை புரட்டிப்போட்ட கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேல்மலை கிராமங்களில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை.

    கடந்த 16-ந் தேதி சுழற்றி அடித்த சூறாவளி புயலின்போது கன மழை கொட்டி தீர்த்தது. இதில் பூண்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்மடை பள்ளம் ஏரிக்கரை நிரம்பியது. இதனால் கடந்த 2 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    நேற்று மேலும் மழை பெய்யத் தொடங்கியதால் ஏரியின் மதகுகள் உடைந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைகிழங்கு, பூண்டு, பீன்ஸ் ஆகிய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.


    ஏற்கனவே அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல லட்சம் நஷ்டம் ஆகியது. தற்போது மீதி இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஏரியில் இருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேறியதால் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 150 அடி நீளம், 30 அடி அகலம், 19 அடி உயரம் உடைய கீழ்மடை பள்ளம் ஏரியில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

    இதனால் தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் விவசாயிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஏரியின் கரையை கான்கிரீட் சுவரால் நிரந்தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Gajastorm

    ×