என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல் ஏரி"

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.

    தற்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்துள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும் கொடைக்கானலை நோக்கி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியின் நடுவே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதன் அருகே செல்லும்போது ஷவர் பாத்தில் குளிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

    குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே படகில் குழுவாக சென்று இதுபோன்ற குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குணா குகை பகுதியிலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதன் அருகே நின்று குணா படத்தில் வரும் பாடலை பாடி சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா இடங்களான தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் ஏரியில் வீசப்பட்டு வந்தன.
    • சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும். 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரி கடந்த 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் சுற்றிப்பார்ப்பதற்காக படகு சவாரியும் செய்யப்பட்டுள்ளது. 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஒட்டி 5 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டு அதில் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏரி சுதந்திரத்துக்கு பிறகு ஏரியின் உரிமை 1950ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டது.

    பின்னர் கொடைக்கானல் நகராட்சி வசம் ஏரி ஒப்படைக்கப்பட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி படகு சவாரி செய்யும் இடமாக இருப்பதால் அனைத்து நாட்களிலும் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். சீசன் காலங்களில் இங்கு படகு போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    சுற்றுலா தலமான கொடைக்கானலில் மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது. இதனை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையிலேயே திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் மூலம் உள்ளூர் குடிமகன்கள் காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்து பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் ஏரியை சுற்றி மது அருந்தும் குடிமகன்கள் பாட்டில்களை ஏரியில் வீசிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் சேர்வதால் மாசடைந்து வந்தது. தினந்தோறும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சாலையோரம் கிடக்கும் மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் ஏரியை தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியாக நகராட்சி சார்பில் 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் 6 டன் அளவுக்கு காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஏரியை சுற்றி அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள் பாட்டிலை ஏரியில் வீசிச் சென்று விடுகின்றனர். மேலும் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    அது போன்ற நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த போதிலும் முழுமையாக தடுக்க முடிவதில்லை. இது குறித்து நகராட்சி ஆணையர் சத்தியநாதன் தெரிவிக்கையில், காலி மது பாட்டிலை அகற்றுவது சவாலான பிரச்சனையாக உள்ளது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விடுதி அறைகளில் வைத்து மது குடிப்பதோடு தாங்கள் சுற்றிப்பார்க்கும் இடங்களிலும் அதனை ரகசியமாக எடுத்து வந்து குடிக்கின்றனர்.

    நகராட்சி சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டு ஏரியில் இருந்து கடந்த மாதங்களில் மட்டும் 6 டன் மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் காலி மதுபாட்டில்கள் ஏரியில் கிடக்கும் என்று நம்புகிறோம். அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். 

    ×