என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmir Assembly"

    • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம்.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது.

    ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர்அப்துல்லா பதவி ஏற்றார். அவரது தலைமையில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி இருந்தார். இது தொடர்பாக உமா் அப்துல்லா டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார்.

    இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

    தேசிய மாநாட்டு கட்சி யின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.எ.வுமான அப்துல் ரகீம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்ட சபையின் முதல் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப் பட்டார்.

    சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியிட விரும்பாததால் குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் தேர்வானார். அப்துல் ரகீமை முதல்-மந்திரி உமர் அப்துல்லா, எதிர் கட்சி தலைவர் சுனில் சர்மா ஆகியோர் சபா நாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அவர் 2002 முதல் 2008 வரை பி.டி.பி-காங்கிரஸ் அரசு இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

    அதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்தியும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) எம்.எல்.ஏ. வகீத் பாரா தீர்மானம் கொண்டு வந்தார்.

    புல்வாமா எம்.எல்.ஏ. வான அவர் கூறும்போது, `ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்த அவை எதிர்க்கிறது என்று கூறி தீர்மானத்தை முன் வைத்தார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 28 எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிராக எழுந்து நின்றனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

    சட்டசபை விதிகளை மீறி தீர்மானம் கொண்டு வந்ததற்காக வகீத் பாராவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஷாம்லால் சர்மா கோரிக்கை வைத்தார்.

    அமளிக்கு பிறகு உமர் அப்துல்லா பேசினார். அதைத் தொடர்ந்து கவர்னர் மனோஜ் சின்கா உரை ஆற்றினார்.

    காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. எனவே கவர்னர் நியமனம் குறித்து பரிசீலிக்க மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அரங்கேற்றி இருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கவர்னருக்கு கடிதம் கொடுத்தவுடன், அவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்குப் பதில், இந்த ஜனநாயகப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறார் அம்மாநில கவர்னர்.

    மாற்று சித்தாந்தம் உடைய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்று கவர்னர் ராஜ்பவனில் அமர்ந்தவாறே தன்னிச்சையாக முடிவு செய்து அந்த சட்டமன்றத்தைக் கலைத்திருப்பது, உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பிற்கும் நேர் எதிரானது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மதசார்பற்ற ஆட்சி அமைவதைத் தடுக்கும் பொருட்டு, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அம்மாநில கவர்னரின் நடவடிக்கை மீது சுப்ரீம்கோர்ட்டே குட்டு வைத்த பிறகும், ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் போன்ற பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகளான கவர்னர்கள் திருந்துவதாக இல்லை.

    பா.ஜ.க.வின் விசுவாசிகளாக இருப்பதிலேயே மனநிறைவு கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாத அ.தி.மு.க. ஆட்சியை, அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பதவியேற்ற கவர்னர்கள் மத்திய பா.ஜ.க.வின் கட்டளை கேட்டு, இப்படித்தான் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அனுமதித்தார்கள்.

    அதன் விளைவு இன்றைக்கு ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் ஒரே ஊழல் மயமாகி, ‘கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்’ என்ற கேவலமான நிலை ஏற்பட்டு, கஜா பேரிடர் போன்ற நெருக்கடியான நேரத்தில்கூட உரிய நிவாரணம் கிடைக்காமல் மக்கள் 6 நாட்களுக்கும் மேலாக இருட்டில் இடருற்று அவதிப்படுகிறார்கள் என்றால் பொறுப்பற்ற, பெரும்பான்மையற்ற அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது தான் முக்கியக் காரணம்.

    இதற்கு அரசியல் சட்டத்தை வளைத்துள்ள கவர்னர்களும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    அதேபோன்று நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை ஒரு கவர்னரே உருவாக்கி இருக்கிறார் என்பது வேலியே பயிரை மேய்வதைப் போல் ஆகி இருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க.வின் சட்டமல்லாத சட்டத்திற்குப்பணிந்து, அரசியல் சட்டத்தை ஜனநாயக அக்கறை சிறிதுமின்றி காவு கொடுக்கும் கவர்னர்களால் நாட்டில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

    அரசியல் சட்டத்தின்படி நடக்க கவர்னர்கள் தயாராக இல்லை என்ற போக்கு நீடிப்பது நாட்டின் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதும் அல்ல. மத்திய-மாநில உறவுகளுக்கு உகந்த நிலையும் அல்ல. ஆகவே அரசியல் சட்டத்தின்படி நீடிக்கும் கவர்னர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தகுதிகள் குறித்து சர்க்காரியா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையும் தாண்டி ஆலோசிக்க வேண்டிய தருணமும் கட்டாயமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்.

    ஆகவே கவர்னர் நியமனம் மற்றும் அவர்களுக்கான தகுதிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பரிசீலித்து வரையறை செய்ய மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved #SatyaPalMalik
    ×