search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur police station"

    • தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .

    கரூர் போலீஸ் நிலையத்தில் காதலியுடன் சேர்த்து வைக்க கோரி வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபிநாத் (வயது 24), சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கல்லூரி மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சம டைந்தனர்.

    அதனை தொடர்ந்து இருவரின் வீட்டில் இருந்தும் பெற்றோர்களை அழைத்து கரூர் டி.எஸ்.பி கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த கோபிநாத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வெளியேறினார்.

    பின்னர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து எங்களை வாழவிடவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தார். மேலும் தனது கழுத்தின் பின்பகுதியை கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    இதனை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவர் மேலும் கழுத்தை அறுக்காமல் கத்தியை பறித்தனர். மேலும் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரூர் நகர காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×