search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kantha sasti kavasam"

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
    கந்த சஷ்டி கவசம் விளக்கம்

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

    ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த் திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல்,

    தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
    அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    முருகனுக்கு உகந்தது கந்த சஷ்டி கவசம். முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி விரத நாட்களில் கந்த சஷ்டி கவசம் படிப்பது புண்ணியம் தரும்.
    கந்த சஷ்டி கவசம்

    பால தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்.

    காப்பு

    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை.

    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.

    நூல்

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட

    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக

    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக

    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக

    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென

    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து

    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று

    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க

    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க

    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க

    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க

    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்

    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

    வாய்விட் டலறி மதிகெட் டோட
    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய

    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்

    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்

    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே

    பரிபுர பவனே பவமொளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே

    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே

    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக

    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக

    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்

    வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை

    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்ரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!

    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    (கந்த சஷ்டி கவசம் நிறைவுற்றது)
    ×