search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery owner"

    காஞ்சீபுரத்தில் நகைக்கடை அதிபரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் செங்கழு நீரோடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் பா.ஜ.க. கட்சி பிரமுகரான இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று இவர் கடைக்கு ஒரு போன் வந்தது. மோகன்லாலின் மகன் தினேஷ்குமார் போனை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியவர், ‘‘காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து டாக்டர் பேசுகிறேன். எனக்கு அவசரமாக 3 சவரனில் 5 தங்க சங்கிலிகள் தேவைப்படுகிறது. அவசரமாக ஆபரே‌ஷன் செய்ய ஆபரே‌ஷன் தியேட்டருக்கு செல்லவிருப்பதால் நகைகளை எடுத்து வந்து கொடுத்து விட்டு பணம் வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்.

    இதை நம்பிய தினேஷ் குமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியின் வரவேற்பரை பகுதியில் நின்றிருந்த ஒருவர், ‘‘ஏன் தாமதமாக வருகிறீர்கள் டாக்டர் இவ்வளவு நேரம் காத்திருந்து இப்போதுதான் ஆபரே‌ஷன் தியேட்டரில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். நகைகளை என்னை வாங்கி வரச் சொன்னார். பணத்தை என்னிடமே கொடுப்பார். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்’’ என்று கூறினர்.

    இதை நம்பிய தினேஷ்குமார் நகைகளை அவரிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அவர் நைசாக நழுவி வெளியே சென்று விட்டார்.

    நீண்ட நேரம் காத்திருந்த தினேஷ்குமார் ஆஸ்பத்திரியில் விசாரித்த போது எந்த டாக்டரும் நகைக்கடைக்கு போன் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சிடைந்த அவர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினியிடம் புகார் செய்தார். ஆஸ்பத்தரி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்த போது சந்தேகப்படும்படியான ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர்.

    ஆனால் நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அக்கம்பக்க பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூதன நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    நூதன முறையில் நகைக்கொள்ளை நடந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம் அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பணத்தை பறித்த சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம் தேவை இருப்பதால் பணத்தை உடனே கொடுத்தால் தங்கத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விடலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் பணத்துடன் இருவருடன் காரில் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர் இவர்களுடன் இணைந்துள்ளார்.

    காஞ்சீபுரத்தில் காரில் சுற்றி வந்து கொண்டிருந்த போது நகைகளை பற்றி மணிகண்டன் கேட்டதால், தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம். எனவே முதலில் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு வந்து பிறகு வாங்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    பின்னர் மாலையில் காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாகக் கூறி காரில் அங்கு இருந்து சென்றனர். சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பைபாஸ் அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து 3 பேரும் மணிகண்டனிடம் உள்ள பணத்தினை பறிக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

    உடனே காரில் இருந்த 3 பேரும் துப்பாக்கியை காட்டி மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தினை பறித்தனர்.

    மேலும்மணிகண்டனை சாலையோரம் தள்ளி விட்டு 3 பேரும் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இது பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×