search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigative"

    • கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை அடுத்துள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் முத்துப்பாண்டி கண்டித்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் ராஜேஸ்வரி தனது தவறை உணர்ந்து இனிமேல் பரமசிவத்துடன் பழக மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் ராஜேஸ்வரியிடம் பேச பரமசிவம் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு, இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.

    வீட்டு திண்ணையில் தூங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம் அங்கிருந்து தப்பினார்.

    இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடி தலைமறைவாகிய பரமசிவத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    அவர் வெளியூருக்கு எங்காவது தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே பரமசிவத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பரமசிவத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி.
    • சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மொபட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

    நேற்று முன்தினம் கருத்தராஜாபாளையம் துணை மின் நிலையம் அருகில் உள்ள விவசாய தோட்ட வேலி பகுதியில் முருகேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை யார் செய்தார்? கொலைக்கான காரணம் என்ன ? என பல்வேறு கேள்விகள் கேட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×