என் மலர்
நீங்கள் தேடியது "Hiccup"
- பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன.
- நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும்.
நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் விக்கல். அதாவது, அனிச்சைசெயல்.

நாம் சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.
விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது. அது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்னை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது. பயம் கொள்ள தேவையில்லை. உணவும் உண்ணும் போதோ உணவு உண்ட பின்போ ஏற்படுவது சகஜம். குழந்தைகள் தங்களை அறியாமலே அதிக காற்றை உணவு உண்ணும் போதும் பால் அருந்தும்போதும் காற்றை விழுங்கி விடுகின்றனர். வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.
சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் தடுக்கப்படும்.
குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது.
சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம்.
கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும். உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது.
குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.






