search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government worker"

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. #JactoGeo

    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ எனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தினார்கள்.

    இதை ஏற்று அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

    அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு அரசிடம் இருந்து வரும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரையில் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் போராட்டத்தை முன் எடுத்து செல்ல முடிவு செய்தனர்.

    திட்டமிட்டப்படி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்ததோடு போராட்டத்தில் குதித்தனர்.

    பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


    யார்-யார்? பணிக்கு வந்துள்ளார்கள் என்ற விவரங்களை பள்ளிகளும், அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கணக்கெடுக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் “பணியில்லை ஊதியமும் இல்லை” என்ற கொள்கையின்படி சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை மீறி இன்று முதல் அவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    25-ந்தேதி வரை 4 நாட்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளான இன்று அனைத்து தாலுகா அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    பணிக்கு செல்லாத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசு அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நாளை 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களும் தாலுகா தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.

    ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இதனால் அரசு துறையின் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்கள் வருகை தந்தனர்.

    தற்போது தேர்வு காலம் தொடங்க இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மூடப்படாமல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு அலுவலகங்கள் நிறைந்த எழிலகம், குறளகம், பனகல் மாளிகை போன்றவற்றில் அரசு ஊழியர்கள் குறைந்த அளவில் பணிக்கு வந்திருந்தனர்.

    ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் தலைமையில் எழிலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ஜாக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடைப்பெற்றாலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் ஒரு பிரிவினர் பணிக்கு சென்றனர். என்.ஜி.ஓ. சங்கம், தலைமை செயலக சங்கம், அலுவலக உதவியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

    தலைமை செயலகத்தில் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். #JactoGeo

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் விடிய விடிய உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. #JactoGeoProtest

    சென்னை:

    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை களைதல், சிறப்புகால ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் போன்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

    இதை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு தலையிட்டு ஊதிய முரண்பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.

     


    ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் போராட்டக்குழுவினர் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம் மேற் கொள்ள இருப்பதாக கூறினார்கள்.

    இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

    ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம், தாஸ், வெங்கடேசன், அன்பரசு, முத்துசாமி, சுரேஷ், தாமோதரன், தியாகராஜன், மோசஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் விடிய விடிய நடந்தது.

    இரவு முழுவதும் உண்ணா பந்தலிலேயே படுத்து உறங்கினார்கள். ஒருசில பெண் நிர்வாகிகளும், உண்ணாவிரத மேடையில் தூங்கினார்கள். தண்ணீரை மட்டுமே அவர்கள் பருகி வருகிறார்கள்.

    இன்று காலை 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நீடித்தது.

    இதில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்று சோர்வடைந்தனர். ஆனாலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். 50 பெண்கள் உள்பட 250 நிர்வாகிகள் உண்ணா விரதம் இருக்கிறார்கள்.

     


    உண்ணாவிரதம் இருந்து வரும் அரசு ஊழியர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், ஒருங்கிணைப்பாளர்களிடம், “உடலை வருத்தி ஏன் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்? இந்த அரசு எதையும் செய்யாது. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள். விரைவில் மலரும் தி.மு.க. ஆட்சியில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    இன்று சட்டசபையில் இதுபற்றி குரல் கொடுப்பேன் என்றும் அரசு ஊழியர்களிடம் உறுதி அளித்தார். #JactoGeoProtest

    சம்பள உயர்வு மற்றும் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி சென்னையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். #teachersstrike

    சென்னை:

    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பல்வேறு கட்டங்களாக நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் 7-வது ஊதியக்குழு அறிவித்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

    மேலும் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பிரதானமாக முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     


    இது தொடர்பாக கடந்த ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது. இதனால் அப்போது ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

    அதனால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதை அரசும் ஒப்புக் கொண்டது.

    ஆனால் இதுவரை அந்த பரிந்துரையை அரசு வெளியிடவில்லை. ஆனால் அந்த குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த மே மாதம் 8-ந்தேதி சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தின் போது ஒரு நபர் கமிட்டியில்தான் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்தது.

    அதன்படி சென்னை எழிலகத்தில் இன்று ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் என 250 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். #teachersstrike

    ×