search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbage waste"

    • தூய்மை பணியாளர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த சில ஆண்டுகளாக புலவர்பள்ளி பகுதியில் கொட்டி அங்கு பிரித்து வந்தனர்.

    குப்பைகளை பிரித்து எருவாக்கும் வகையில் பயோ மெட்ரிக் செய்யாமல் அங்கு குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும்,பல்வேறு மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 10 நாட்களாக குப்பைகள் அங்கு கொட்டகூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்க கடந்த 15 நாட்களாக வரவில்லை என்றும் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல தூய்மை பணியாளர்கள் வராமல் தெருக்கள்,சாலைகள்,கழிவு நீர் கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் பரவி குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    மேலும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி பிரிப்பதற்கு புலவர்பள்ளி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கு குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்க குப்பைகிடங்கு கட்டுவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கு இதுவரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள கோமுட்டேரி என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் இடம் தேர்வு செய்து அங்கும் குப்பைகள் பிரித்து உரம் தயார் செய்வதற்கு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அங்கும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். வீடுகளில் சேறும் குப்பைகளை தினதோறும் தூய்மை பணியாளர்கள் சேகரித்து சென்று வருகிறார்கள்.

    மொத்தம் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வார்டுக்கு 52 தொழிலாளர்கள் என்ற அளவில் அவர்கள் தூய்மைபணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தூய்மைபணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது வார்டுக்கு 20 பணியாளர்கள் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு தெருவுக்கு குப்பைகள் சேகரிக்க செல்லும் தொழிலாளர்களால் அப்பகுதியில் முழுமையாக பணியை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் மதியம் வரை குப்பை சேகரிக்கும் பணி நடந்தும் முழுவதும் முடிக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கி விடுகிறது.இதற்கு முன்பு காலை 10 மணிக்குள் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு முடிந்து வந்தது. இதற்கிடையே குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரமுடியாததால் பெரும்பாலானோர் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தெருக்கள், மற்றும் வீட்டு முன்பு வீசிவிடுகின்றனர். அதையும் அகற்ற நாள்கணக்கில் ஆவதால் திருவொற்றியூர் பகுதி முழுவதுமே குப்பை நகரமாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் குப்பைகளால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளான விம்கோ நகர் சக்திபுரம், எல்லையம்மன் கோவில், காலடிபேட்டை, மாடர்ன்லைன், மேற்கு மாடவீதி, வடிவுடையம்மன் கோவில் பின்புறம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பல இடங்களில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அவை நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் குப்பை அதிகம் சேரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மறுநாள் குப்பை சேகரிப்பு பணி கடும் சவாலாக மாறி வருகிறது. மேலும் வாகனங்களில் வந்தும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அப்போது குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வார்டு தூய்மையாக இருந்தது.

    ஆனால் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் 24 பேர் மட்டுமே ஒரு வார்டில் வேலை செய்கின்றனர். வார்டில் வேலை செய்யும் ஒரு தூய்மை பணியாளர் 7, 8 தெருக்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அவர் பகல் 12 மணி வரையும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல வார்டுகளில் குப்பையை தரம் பிரிக்க இடம் இல்லை. எனவே அந்தந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை கட்டி போட்டு விட்டு பின்னர் மொத்தமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். நீண்ட நேரம் குப்பை தெருக்களில் தேங்கி கிடப்பதால் அவற்றை கால்நடைகள், நாய்கள் சாலைகளில் இழுத்து போட்டு விடுகிறது. குப்பைகள் அதிகம் சேர்ந்தால் அதை மூட்டை கட்டி அருகில் உள்ள பள்ளம் மற்றும் முட் புதர்களில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது. எனவே இது குறித்து மேலும் 350 தூய்மை பணியாளர்கள் வேண்டுமென்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளோம். உடனடியாக கூடுதல் ஆட்களை ஒதுக்கி திருவொற்றியூர் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் நாங்கள் அதில் தலையிடுவதில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    ×