15 நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்

தூய்மை பணியாளர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
15 நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த சில ஆண்டுகளாக புலவர்பள்ளி பகுதியில் கொட்டி அங்கு பிரித்து வந்தனர்.

குப்பைகளை பிரித்து எருவாக்கும் வகையில் பயோ மெட்ரிக் செய்யாமல் அங்கு குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும்,பல்வேறு மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 10 நாட்களாக குப்பைகள் அங்கு கொட்டகூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்க கடந்த 15 நாட்களாக வரவில்லை என்றும் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல தூய்மை பணியாளர்கள் வராமல் தெருக்கள்,சாலைகள்,கழிவு நீர் கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் பரவி குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி பிரிப்பதற்கு புலவர்பள்ளி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கு குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்க குப்பைகிடங்கு கட்டுவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு இதுவரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள கோமுட்டேரி என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் இடம் தேர்வு செய்து அங்கும் குப்பைகள் பிரித்து உரம் தயார் செய்வதற்கு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அங்கும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com