search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer money theft"

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 52). விவசாயி. இவர் ராசிபுரம் ஒரு வழிப்பாதை அருகில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    ராசிபுரத்தில் உள்ள வீட்டில் விவசாயி மாதேஸ்வரன், அவரது மனைவி தமிழ்செல்வி (46), நவீன் (23) மவுரீஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் நவீன் சிவில் என்ஜினீயர். மவுரீஸ்வரன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாதேஸ்வரன் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு ராசிபுரம் அருகேயுள்ள பட்டணத்தில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இன்று காலையில் அவரது மூத்த மகன் சிவில் என்ஜினீயரான நவீன் ராசிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அவர் வீட்டின் வெளிக்கதவு திறந்து கிடந்ததை கண்டார். இது பற்றி பட்டணத்தில் இருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தந்தார். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். பிறகு அவர்கள் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த விளக்கை பற்ற வைத்து படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் மீது வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்துள்ளனர். ஆனால் லாக்கரை அவர்களால் திறக்க முடியாததால் அதை நெம்பி திறந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை கலைத்து போட்டுள்ளனர். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கண்டு மாதேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் ராசிபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
    தொண்டியில் விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் மற்றும் நகையை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    தொண்டி:

    தொண்டி அருகேயுள்ள சேமன்வயலைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (வயது 52). இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால் தொண்டியில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடகு வைக்க வந்தார்.

    அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்ட அவர் மீதமுள்ள 18 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.3 லட்சத்துடன் வெளியே வந்தார்.

    தனது இரு சக்கர வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கீழே 50 ரூபாயை வீசினார். பின்னர் சண்முகத்திடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்றார். அந்த பணத்தை எடுப்பதற்காக சண்முகம் கீழே குனிந்தார்.

    அந்த சமயத்தில் அந்த வாலிபர், சண்முகம் இரு சக்கர வாகனத்தில் மாட்டியிருந்த பையை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    கண் இமைக்கும் நேரத்தில் பணம்-நகையை பறிகொடுத்த சண்முகம் தொண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சியில் பஸ்சில் பயணம் செய்த விவசாயிடம் ஜேப்படி செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), விவசாயி. நேற்று இவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து நீலமங்கலம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனின் சட்டை பையில் இருந்த 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓட முயன்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட முருகேசன் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த வாழவந்தான் மகன் ராமமூர்த்தி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். 

    ×