search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elliots Beach"

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×