search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitrai Vishu"

    • விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டுள்ளன.
    • சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.

    தமிழ் மக்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழா கொண்டாடி, அந்த மாதத்தின் சிறப்புகளை உலகறிய செய்துள்ளனர். அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்கள், காரண காரியம் இல்லாமல் நடைபெறுவதில்லை. சித்திரை விஷூ இப்போது கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாக இருந்தாலும், ஆரம்ப காலங்களில் நம் தமிழ் பேசும் மக்களால் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த சித்திரை விஷூவானது ஆரம்ப காலங்களில் நம் மக்களால் `அறுவடை திருவிழா' என்றுதான் அழைக்கப்பட்டது.

    ஆரம்ப காலங்களில் நம் மக்கள் இரண்டு பருவங்களில் விவசாய அறுவடைகளை செய்து வந்துள்ளனர். அதில் ஆடி மாதம் விதை விதைத்து தை மாதம் அறுவடை செய்வது ஒரு பருவமாகும். புரட்டாசி மாதம் விதை விதைத்து சித்திரை மாதம் அறுவடை செய்வது இன்னொரு பருவமாகும். புரட்டாசி மாதமானது வைணவர்களின் மிக முக்கியமான மாதமாகும்.

    இந்த மாதத்தில் விதை விதைத்து விவசாய வேலைகளை ஆரம்பிப்பது வைணவ கடவுளான பெருமாளின் முழு ஆசீர்வாதத்தோடு நடப்பதாக வைணவர்களின் முழு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிடப்படும் பயிர்களின் அறுவடையானது சரியாக சித்திரை மாதம் பிறக்கும் பொழுது, இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    இது போன்ற விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டு வந்துள்ளன. இந்த சித்திரை விஷூவும் பெண் தெய்வமான கொற்றவையை மையப்படுத்தியதுதான். கொற்றவை தெய்வமானது திருமாலின் பெண் அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இந்த விவசாய வேலைகள் நல்லபடியாக முடிந்ததற்காக முதலில் சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.

    பிற்கால பாண்டியர் காலம் வரை கேரள பகுதியானது நம் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனால் இந்த ஏப்ரல் மாத அறுவடையானது, நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்கால பாண்டிய பேரரசு தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்தவுடன் அனைத்து பகுதிகளும் தனித்தனியாக பிரிந்து, ஒவ்வொரு திருவிழாவும் அந்தந்த பகுதி சார்ந்த திருவிழாவாக மாற ஆரம்பித்தன.

    அப்படித்தான் இந்த சித்திரை விஷூ திருவிழாவும். இன்று அறுவடை திருவிழா கேரள மக்களுக்கான ஒரு திருவிழாவாக மாறிப்போனது. சித்திரை விஷூ தற்போதும் கேரள மக்களாலும், பாலக்காடு தமிழர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு.
    • இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இன்று தமிழ்ப் புத்தாண்டு. சோபகிருது வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்றுமுதல் குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். பொதுவாகவே, தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோயில்களிலும் வீட்டுப்பூஜையிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை "பஞ்சாங்கப் படனம்'' என்று சொல்வார்கள்.

    முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களை பரப்பிவையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு முதன்முதலாக பூஜை அறையில் இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை "சித்திரை விஷூ'' என்பார்கள்.

    உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

    • 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை.
    • சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா, விஷு, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் வழக்கம்போல் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளும், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக 14-ந் தேதி விஷு பண்டிகை நாளில் சிறப்பு பூஜை அதிகாலை 3 மணி முதல் நடைபெறும். அன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

    சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும். தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல்லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

    ×