search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI Report"

    தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் சி.பி.ஐ. அறிக்கையை ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DSPVishnuPriya #CBIReport
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தான் வி‌ஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் யாரும் குற்றவாளிகள் இல்லை. எனவே வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிவித்தது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.

    ஆனால் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. அறிக்கையை தங்களுக்கு தர வேண்டும் என ரவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனை விசாரித்த கோர்ட்டு சி.பி.ஐ. அறிக்கையை ரவிக்கு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளின் அறிக்கையை கொடுக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த அறிக்கை ரவியிடம் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி துரைராஜ் உத்தரவிட்டார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து தனது வக்கீல் அருண்மொழியுடன் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வெளியே வந்தார். இது குறித்து வக்கீல் அருண் மொழி கூறியதாவது-

    விஷ்ணு பிரியா மரணத்தில் நிறைய சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு மனு தாக்கல் செய்தோம். சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த சாட்சிகளை விசாரித்தார்கள். என்னென்ன ஆவணம் கேட்டு இருந்தனர் என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு இருந்தோம். கோர்ட்டும் சி.பி.ஐ. அறிக்கை வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் போலீசார் சி.பி.ஐ. அறிக்கையை வழங்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை அறிக்கையை அளித்து உள்ளனர். மீண்டும் சி.பி.ஐ. அறிக்கையை வழங்க கேட்டு உள்ளோம். கோர்ட்டும் வழங்க உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DSPVishnuPriya #CBIReport
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting #CBIReport
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.  #ThoothukudiShooting #CBIReport

    சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சாதாரண சம்பவம் என்று கருதமுடியாது. மிகவும் தீவிரத்தன்மை கொண்ட அரிதிலும் அரிதான கொடுமையான சம்பவம்.

    இந்த கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளும் அன்று பொறுப்பில் இருந்த கலெக்டரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். தங்கள் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு போலீசார் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது.

    எந்த ஒரு சம்பவத்தின் மீதும் நேர்மையான, சுதந்திரமான விசாரணை என்பது அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே, சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு தூத்துக்குடி தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இந்த விசாரணை கோர்ட்டு மேற்பார்வையில் நடத்தப்பட்டு இதுகுறித்த விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    அதேபோல தகவல் உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை ரத்துசெய்துள்ள தமிழக அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.

    எனவே இந்த 3 மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை நிறுத்திவைத்துள்ள தமிழக அரசின் ஆணையை உடனடியாக ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    ×