search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood donation awareness"

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    திண்டுக்கல்லில் தாலி கட்டும் முன் மணமக்கள் ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #BloodDonation
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கும் அனுமோனிஷா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மணமகன் ஹரிஹரனும், மணமகள் அனுமோனி ஷாவும் மேடைக்கு அருகிலேயே ரத்ததானம் செய்தனர்.

    இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

    இது குறித்து ஹரிஹரன் கூறுகையில், அனுமோனி ஷாவின் தந்தை பாஸ்கரன் 110 முறை ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவரது தாயாரும் செவிலியருமான ரமாதேவி 70 முறை ரத்ததானம் செய்துள்ளார்.

    வாழ்க்கை முழுவதும் ரத்ததானம் செய்வதையே தங்கள் லட்சியமாக வைத்துள்ள குடும்பத்தில் பெண் எடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

    நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். பல திருமண விழாக்களில் இயற்கையை போற்றவும், மழைநீரை சேமிக்கவும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்குவதை பார்த்துள்ளோம்.

    அதுபோல ரத்த தானமும் சமூகத்திற்கு தேவையான மிகச்சிறந்த சேவையாகும். ரத்தத்தில் ஜாதி இல்லை, மதம் இல்லை, வகைகள்தான் உள்ளது. எனவே என்னைப் போல மற்ற திருமண விழாக்களிலும் மணமக்கள் ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

    மணமக்களின் இந்த செயலை பார்த்து திருமண விழாவிற்கு வந்த 35-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். விழாவில் காஷ்மீர் மாநிலத்தில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மணமக்கள் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்ததானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வினோதமான முறையில் நடந்த இந்த திருமண விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
    ×