search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basil Tea"

    • டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினம்.
    • சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

    புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது.

    தேநீரின் சுவைக்கும், நறுமணத்திற்கும் காரணமான தேயிலையுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மற்ற மூலிகைகளையும் கலந்து பருகலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே...

    தேயிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி டீ தயார். இது குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தேயிலையுடன் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருகவும்.

    இந்த தேநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை இனிப்பு சேர்க்காமல் பருகலாம். தேயிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும், அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீயாக பருகலாம். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது அதிக பலன் தரும்.

     தேயிலை மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கொய்யா இலை டீயாக பருகலாம். கொய்யா இலைக்கு மாற்றாக கொத்தமல்லித்தழை அல்லது புதினா இலையைச் சேர்த்து கொதிக்க வைத்தும் பருகலாம்.

    தேயிலையுடன் தனியா விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து தனியா டீயாக பருகலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தனியா டீ, ரத்த சோகையை தடுப்பதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்தும். தேயிலையுடன் இஞ்சி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் இஞ்சி டீ தயார். இதில் இஞ்சிக்கு மாற்றாக மிளகு சேர்த்தும் தயாரிக்கலாம். இது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

     முருங்கை கீரை மற்றும் எலுமிச்சை இலை இரண்டையும் தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும்.

    செம்பருத்தி பூக்களை தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். செம்பருத்திக்கு பதிலாக ரோஜா இதழ்களை சேர்த்தும் தயாரிக்கலாம். ரோஜாப்பூ டீ இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து தூக்கத்தை சீராக்கும்.

     தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி டீ தயார். செரிமானக் கோளாறு, சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும்.

    • சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
    • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுவாசம் மேம்படும்

    துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.

    சரும பாதுகாப்பு

    துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    செரிமானம்

    அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.

    அழற்சி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.

    மன நலம்

    துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.

    ரத்த சர்க்கரை

    துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.

    எடை மேலாண்மை

    துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.

    இதய ஆரோக்கியம்

    துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    ×