search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Tea Day"

    • காலை எழுந்ததும் ஒரு டீ, வேலையிடத்தில் நண்பர்களுடன் ஒரு டீ, மாலை நேர சோர்வில் ஒரு டீ என்று ஒரு நாளில் முக்கியமான உறவாகிவிடுகிறது.
    • மன அழுத்தத்தை போக்கும் பாடல் போல டீயும் ஒரு வைப் என்று சொல்கிறார்கள்.

    தண்ணீர் கொதிக்க வைக்கும் போது, காற்று வீசியதால் சில தேயிலைகள் பாத்திரத்தில் விழுந்து கலந்தன. அப்போதுதான் டீ என்னும் பிரபலமான பானம் கண்டுபிடிக்கப்பட்டது. நம் வாழ்வோடு பிரிக்க முடியாத ஒரு பானமாக மாறிவிட்டது தேநீர். இன்று ( டிசம்பர் 15 ) சர்வதேச தேநீர் தினம். உள்ளூர் தொடங்கி உலகளவில் மக்கள் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைக்கிறது தேநீர்.

    சூடாக ஒரு கப் டீ... என்ற வாக்கியமே நம் அன்றாடம் கேட்கும் ஒரு வாக்கியமாக ஆகிவிட்டது. ஸ்ட்ராங்கா, லைட்டா, மீடியமா, சக்கரை கம்மியா, சக்கரை தூக்கலாக என மக்களுக்கு பிடித்த வகைகள் இருக்கிறது. பால் கலந்து குடிப்பது, சர்க்கரை சேர்ப்பது, எதுவும் சேர்க்காமல் தேயிலையை மட்டும் கொதிக்க வைத்து குடிப்பது, குளுகுளுவென கூலாக குடிப்பது என பல வகையில் தேநீர் தயார் செய்து, பருகப்பட்டு வருகிறது.


    "தேநீரை தந்த கடவுளுக்கு நன்றி! தேநீர் இல்லாமல் உலகம் என்ன செய்யும்? அந்த காலம் எப்படியிருந்திருக்கும்? நான் தேநீருக்கு முன் பிறக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார் ஆங்கில எழுத்தாளர் சிட்னி ஸ்மித். அதுவும் உண்மை, சிலருக்கு தேநீர் நம்பிக்கையாக, துணையாக இருக்கிறது. சிலர் டீயுடன் தனக்கென ஒரு உறவை வைத்து கொள்கிறார்கள். காலை எழுந்ததும் ஒரு டீ, வேலையிடத்தில் நண்பர்களுடன் ஒரு டீ, மாலை நேர சோர்வில் ஒரு டீ என்று ஒரு நாளில் முக்கியமான உறவாகிவிடுகிறது.

    வெயில், மழை, பனி என்று எல்லா காலத்திலும் வழக்கமாக ஆகிவிட்டது.

    இளைஞர்கள் டீ என்பது ஒரு எமோஷன் என்று கருதுகிறார்கள். மன அழுத்தத்தை போக்கும் பாடல் போல டீயும் ஒரு வைப் என்று சொல்கிறார்கள்.


    எங்கும் சென்றாலும் ஈஸியாக கிடைக்கும் ஒரு பானமாக ஆகிவிட்டது. நீண்ட நாள் பின் சந்திக்கும் நண்பர்களிடம் "வா ஒரு டீ குடிக்கலாம்" என்ற குரல் ஒலிக்கின்றது.

    இன்று சூடான தேநீரின் வரலாறும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்...

    தேநீர் வரலாறு: தென்கிழக்கு ஆசியாவில் தான் தேநீர் உதயமாகி உள்ளது. ஏனெனில் இங்கு தான் தேயிலைகள் விளைந்துள்ளன. சரியாக வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையில் தான் தேயிலை முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஷாங் அரசாட்சி காலத்தில் தான் மருத்துவ ரீதியாக தேநீர் பருகும் வழக்கம் தொடங்கியுள்ளது. கால ஓட்டத்தில் அப்படியே படிப்படியாக உலகம் முழுவதும் தேயிலைகள் பயணித்துள்ளன. 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸ் மூலமாக ஐரோப்பிய கண்டத்தில் நுழைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டுக்குள் நுழைந்துள்ளது. இந்திய தேயிலையின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் பிரிட்டிஷ் பேரரசு பெரும் பங்கு வகித்தது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தான் இந்தியாவில் தேயிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்திய தேயிலை வரலாற்றின் படி, புகழ்பெற்ற ஆங்கில தாவரவியலாளர் ஜோசப் பேங்க்ஸ், இந்தியாவில் தேயிலை தோட்டங்கள் செழிக்கும் என்று பரிந்துரைத்தார். இந்தியாவில் பிரபலமானது மேலும் படிப்படியாக இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியது.

    டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

    * பிளாக் டீ வயிற்றுப்போக்கின் விளைவுகளிலிருந்து விரைவான நிவாரணம் தரும். பிளாக் டீயில் காணப்படும் டானின்கள்,

    அழற்சி எதிர்ப்பு கூறுகள் நிறைந்தவை. பிளாக் டீ உடனடி வயிற்றுப்போக்கு விளைவுகளிலிருந்து உங்களை விடுவிக்கும்.

    * கிரீன் டீயில் காணப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * கிரீன் டீ கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ பருகலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.

    * மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தேநீர் போற்றப்படுகிறது. இந்த தேநீரின் நறுமணத்தை உள்வாங்கி, மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற கடுமையான சூழ்நிலைகளில், ஒரு கப் தேநீர் குடிப்பது நல்லது.

    * இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேநீர் பெருமளவு உதவுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு உட்பட இருதய நோய் அபாயத்தை ஓரளவு குறைக்க இந்த பானம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கேற்ப டீயும் அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு தீமை ஆகிவிடும். அதிக அளவில் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினம்.
    • சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

    புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது.

    தேநீரின் சுவைக்கும், நறுமணத்திற்கும் காரணமான தேயிலையுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மற்ற மூலிகைகளையும் கலந்து பருகலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே...

    தேயிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி டீ தயார். இது குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தேயிலையுடன் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருகவும்.

    இந்த தேநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை இனிப்பு சேர்க்காமல் பருகலாம். தேயிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும், அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீயாக பருகலாம். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது அதிக பலன் தரும்.

     தேயிலை மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கொய்யா இலை டீயாக பருகலாம். கொய்யா இலைக்கு மாற்றாக கொத்தமல்லித்தழை அல்லது புதினா இலையைச் சேர்த்து கொதிக்க வைத்தும் பருகலாம்.

    தேயிலையுடன் தனியா விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து தனியா டீயாக பருகலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தனியா டீ, ரத்த சோகையை தடுப்பதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்தும். தேயிலையுடன் இஞ்சி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் இஞ்சி டீ தயார். இதில் இஞ்சிக்கு மாற்றாக மிளகு சேர்த்தும் தயாரிக்கலாம். இது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

     முருங்கை கீரை மற்றும் எலுமிச்சை இலை இரண்டையும் தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும்.

    செம்பருத்தி பூக்களை தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். செம்பருத்திக்கு பதிலாக ரோஜா இதழ்களை சேர்த்தும் தயாரிக்கலாம். ரோஜாப்பூ டீ இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து தூக்கத்தை சீராக்கும்.

     தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி டீ தயார். செரிமானக் கோளாறு, சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும்.

    ×