search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank of india"

    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். #bankrobbery #staffarrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    32 கிலோ எடை உள்ள அந்த நகைகள் அனைத்தும் அடகு நகைகளாகும். அவற்றை திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் அடகு வைத்திருந்தனர்.

    வங்கிக் கதவுகள் மற்றும் லாக்கர் உள்ளிட்ட எதையும் உடைக்காமல் கள்ளச் சாவிகளை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை நடந்திருந்தது வங்கி மேலாளர் சேகர், உதவி மேலாளர் பானு இருவரும் நேற்று காலை வங்கிக்கு வந்தபோது தான் இந்த கொள்ளை பற்றி தெரிய வந்தது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் அந்த வங்கிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வங்கி லாக்கரில் நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கியில் மொத்தம் 7 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த 7 கேமிராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் மூலம் ரூ.9 கோடி நகைகளை யாரோ ஒரு வங்கி ஊழியர்தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு வங்கி ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த கைரேகை பதிவுகளை, வங்கி வாசல் கதவு மற்றும் லாக்கர்களில் ஏற்கனவே பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.

    அந்த கைரேகை ஆய்வில் 5 வங்கி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 5 பேரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் விசாரணை தொடங்கியது.


    இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடந்தது. 5 ஊழியர்களில் 3 பேரை போலீசார் விடுவித்தனர். 2 பேரிடம் தீவிர விசாரணை நீடித்தது. அந்த 2 பேரில் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என்பதை நள்ளிரவில் தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.

    அந்த முக்கிய குற்றவாளியின் பெயர் விஸ்வநாதன். இவர் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முதலில் இவர் வங்கியை சுத்தம் செய்யும் பணிக்காகத்தான் வேலையில் சேர்ந்தார்.

    ஓராண்டுக்கு முன்பு அவரை அலுவலக உதவியாளராக மாற்றினார்கள். அதன் பிறகே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை லாக்கரில் எடுத்து வைக்கவும், லாக்கரை பூட்டவும் அவர் உதவியாக இருந்துள்ளார்.

    நகைகளைப் பார்த்ததும் அவருக்கு அவற்றை கொள்ளையடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் புதிய வீடு ஒன்றை சில லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அந்த கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் அவருக்கு பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து லாக்கரில் உள்ள அடகு நகைகளை திருட முடிவு செய்தார். இதுபற்றி வங்கியின் கீழ் தளத்தில் உள்ள தனது கூட்டாளிகளான சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் ஜெய்கணேஷ், காவலாளி கவுதம் இருவரிடமும் தெரிவித்தார். உடனே அவர்களும் இந்த கொள்ளையில் சேர சம்மதித்தனர்.

    இதையடுத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் கொள்ளைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுலபமாக நகைகளை திருடுவதற்கு வசதியாக வங்கி கதவு மற்றும் லாக்கர்களின் சாவிகளை நைசாக எடுத்துச்சென்று கள்ளச் சாவிகளைத் தயாரித்தனர்.

    அதன் பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரொக்கப் பணத்தில் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் ரூ.25 லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் கைரேகை பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன.

    முதலில் பியூன் விஸ்வநாதன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை. நல்லவன் போல நடித்தார். ஆனால் கைரேகை பதிவு ஆதாரத்தைக் காட்டியதும் அமைதியாகி விட்டார். இனியும் தப்ப முடியாது என்ற நிலை வந்த பிறகே அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.

    அதன் பிறகே அவருக்கு ஜெய்கணேசும், கவுதமும் உதவியாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தான் 32 கிலோ அடகு நகைகள் இருந்தன. அந்த 32 கிலோ நகைகளையும் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.

    விஸ்வநாதன், ஜெய் கணேஷ், கவுதம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி இடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் மிகத் திறமையாக செயல்பட்டு 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்ததுமே போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, இந்த கொள்ளை வங்கி ஊழியரின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அந்த கோணத்தை நோக்கியே அவர் 5 தனிப்படைகளை உருவாக்கி விசாரணையை முடுக்கி விட்டார்.

    வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இறுதியில் அது பியூன் விஸ்வநாதன் செய்த கைவரிசை என்பதை கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 32 கிலோ நகைகளையும் மீட்பதற்காக எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்தனர்.

    இன்று அதிகாலை 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட பிறகே, குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு, ரூ.9 கோடி அடகு நகைகளையும் மீட்ட போலீசாரை திருவள்ளூர் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.. #bankrobbery #staffarrested
    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #bankrobbery
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

    அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது.

    அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கைவரிசை காட்டி விட்டனர்.

    முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

    வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    அடகு நகைகளில் ஒரு நகையைக்கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. பெட்டகங்களை துடைத்து வைத்தது போல அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் டவுன் போலீசார் ஆயில் மில் பகுதிக்கு விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை போன அடகு நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரிய வந்தது.

    ஆனால் வெளிச்சந்தையில் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் அந்த வங்கியில், எத்தனை பேர், எத்தனை பவுன் நகைகளை, எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்தனர் என்ற விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

    இந்த கொள்ளையை மர்ம மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாவலர்கள் இல்லாததால் மிகவும் நிதானமாக அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தப்படியாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளனர். சனிக்கிழமை இரவே மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் அந்த வங்கியின் எந்த ஒரு பூட்டையும் உடைக்கவில்லை. அனைத்து பூட்டுக்களையும் அவர்கள் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி உள்ளனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டரில் இருந்து பாதுகாப்புப் பெட்டகம் வரை மர்ம மனிதர்கள் எந்த ஒரு இடத்திலும் பூட்டை தகர்க்கவில்லை.

    சில வங்கிகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாதபட்சத்தில் சுவரில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடிப்பார்கள். இல்லையெனில் வெல்டிங் செய்யும் கருவி மூலம் பெட்டகங்களை உடைத்து கைவரிசை காட்டுவார்கள்.

    ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. கள்ளச்சாவி போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர்.

    கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள், கட்டிட உரிமையாளர் மற்றும் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் பயன் உள்ள வகையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொள்ளையர்கள் வங்கிக்குள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. அந்த வங்கிக்குள் ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணம் இருக்கும் பகுதிக்கு மர்ம மனிதர்கள் செல்லவில்லை. அடகு நகைகளை மட்டுமே குறி வைத்தே அவர்கள் கை வரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம்தான் இந்த வங்கியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அன்று சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள் அதே பகுதியில் 32 கிலோ தங்கம் கொள்ளை போய் இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பேங்க் ஆப் இந்தியாவில் அடகு நகைகள் கொள்ளை போய் விட்டது என்ற தகவல் பரவியதும் மக்கள் ஆயில்மில் பகுதியில் திரண்டனர். நகைகளை அடகு வைத்த சில பெண்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.

    திருவள்ளூரில் அடுத் தடுத்து நடக்கும் கொள்ளைகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை போன போதே வங்கிகள் உஷாராகி காவலாளியை ஏற்பாடு செய்திருந்தால் அடகு நகைகள் கொள்ளை போய் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது. அதிலும் இன்னமும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டிலும் வங்கியிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.#bankrobbery
    ×