search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 cr"

    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். #bankrobbery #staffarrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    32 கிலோ எடை உள்ள அந்த நகைகள் அனைத்தும் அடகு நகைகளாகும். அவற்றை திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் அடகு வைத்திருந்தனர்.

    வங்கிக் கதவுகள் மற்றும் லாக்கர் உள்ளிட்ட எதையும் உடைக்காமல் கள்ளச் சாவிகளை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை நடந்திருந்தது வங்கி மேலாளர் சேகர், உதவி மேலாளர் பானு இருவரும் நேற்று காலை வங்கிக்கு வந்தபோது தான் இந்த கொள்ளை பற்றி தெரிய வந்தது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் அந்த வங்கிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வங்கி லாக்கரில் நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கியில் மொத்தம் 7 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த 7 கேமிராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் மூலம் ரூ.9 கோடி நகைகளை யாரோ ஒரு வங்கி ஊழியர்தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு வங்கி ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த கைரேகை பதிவுகளை, வங்கி வாசல் கதவு மற்றும் லாக்கர்களில் ஏற்கனவே பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.

    அந்த கைரேகை ஆய்வில் 5 வங்கி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 5 பேரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் விசாரணை தொடங்கியது.


    இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடந்தது. 5 ஊழியர்களில் 3 பேரை போலீசார் விடுவித்தனர். 2 பேரிடம் தீவிர விசாரணை நீடித்தது. அந்த 2 பேரில் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என்பதை நள்ளிரவில் தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.

    அந்த முக்கிய குற்றவாளியின் பெயர் விஸ்வநாதன். இவர் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முதலில் இவர் வங்கியை சுத்தம் செய்யும் பணிக்காகத்தான் வேலையில் சேர்ந்தார்.

    ஓராண்டுக்கு முன்பு அவரை அலுவலக உதவியாளராக மாற்றினார்கள். அதன் பிறகே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை லாக்கரில் எடுத்து வைக்கவும், லாக்கரை பூட்டவும் அவர் உதவியாக இருந்துள்ளார்.

    நகைகளைப் பார்த்ததும் அவருக்கு அவற்றை கொள்ளையடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் புதிய வீடு ஒன்றை சில லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அந்த கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் அவருக்கு பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து லாக்கரில் உள்ள அடகு நகைகளை திருட முடிவு செய்தார். இதுபற்றி வங்கியின் கீழ் தளத்தில் உள்ள தனது கூட்டாளிகளான சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் ஜெய்கணேஷ், காவலாளி கவுதம் இருவரிடமும் தெரிவித்தார். உடனே அவர்களும் இந்த கொள்ளையில் சேர சம்மதித்தனர்.

    இதையடுத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் கொள்ளைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுலபமாக நகைகளை திருடுவதற்கு வசதியாக வங்கி கதவு மற்றும் லாக்கர்களின் சாவிகளை நைசாக எடுத்துச்சென்று கள்ளச் சாவிகளைத் தயாரித்தனர்.

    அதன் பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரொக்கப் பணத்தில் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் ரூ.25 லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் கைரேகை பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன.

    முதலில் பியூன் விஸ்வநாதன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை. நல்லவன் போல நடித்தார். ஆனால் கைரேகை பதிவு ஆதாரத்தைக் காட்டியதும் அமைதியாகி விட்டார். இனியும் தப்ப முடியாது என்ற நிலை வந்த பிறகே அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.

    அதன் பிறகே அவருக்கு ஜெய்கணேசும், கவுதமும் உதவியாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தான் 32 கிலோ அடகு நகைகள் இருந்தன. அந்த 32 கிலோ நகைகளையும் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.

    விஸ்வநாதன், ஜெய் கணேஷ், கவுதம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி இடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் மிகத் திறமையாக செயல்பட்டு 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்ததுமே போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, இந்த கொள்ளை வங்கி ஊழியரின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அந்த கோணத்தை நோக்கியே அவர் 5 தனிப்படைகளை உருவாக்கி விசாரணையை முடுக்கி விட்டார்.

    வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இறுதியில் அது பியூன் விஸ்வநாதன் செய்த கைவரிசை என்பதை கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 32 கிலோ நகைகளையும் மீட்பதற்காக எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்தனர்.

    இன்று அதிகாலை 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட பிறகே, குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு, ரூ.9 கோடி அடகு நகைகளையும் மீட்ட போலீசாரை திருவள்ளூர் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.. #bankrobbery #staffarrested
    ×