search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank fire accident"

    • தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று வழக்கம் போல் பணிகள் இயங்கி வந்த நிலையில் மாலை ஊழியர்கள் வங்கியை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து புகை மண்டலமாக வெளியே வந்து கொண்டு இருந்தது.

    இதைப் பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வங்கியை திறந்து பார்த்தனர். வங்கியின் முன்புறம் உள்ள பணம் செலுத்தும் கவுண்டர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. வங்கியில் உள்ள பணம், நகைகள், பத்திரங்கள் ஆகியவை மற்றொரு அறையில் இருந்துள்ளது. அங்கு தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த வங்கியின் அருகேதான் மாநகராட்சி அலுவலகம், மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது. அதன் அருகில் உள்ள வங்கியிலும் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்த வங்கிக்கு காவலாளி யாரும் கிடையாது. பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா மட்டுமே உட்புறமும், வெளிப்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. காவலாளி இருந்திருந்தால் தீ விபத்து நடந்த உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. #BankFire

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

    தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BankFire

    ×