search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asylum In Police Station"

    கர்நாடக மாநிலம் கொப்பல் அருகே முதலிரவின் போது மாயமான புதுப்பெண் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். #WomanMissing
    பெங்களூரு:

    கொப்பல் மாவட்டம் குடூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் மல்லனகவுடா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி குஷ்டகி தாலுகா புரா கிராமத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வைத்து நடந்தது.

    இந்த திருமணத்தை தொடர்ந்து காயத்ரி-மல்லனகவுடாவின் முதலிரவுக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி அவர்களின் முதலிரவு குடூரு கிராமத்தில் உள்ள காயத்ரியின் வீட்டில் வைத்து நடைபெறுவதாக இருந்தது.

    இதற்கான வேலைகளை அவர்களின் குடும்பத்தினர் மேற்கொண்டு இருந்தனர். மல்லனகவுடாவும், காயத்ரியும் முதலிரவுக்கு தயாராகினர். இந்த வேளையில், மல்லனகவுடா கழிவறைக்கு சென்றார். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கும்பல் காயத்ரியை வீடு புகுந்து கடத்தி காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லனகவுடா மற்றும் அவருடைய குடும்பத்தினர் காயத்ரியை தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் புதுப்பெண் காயத்ரியை, சோமனாலா கிராமத்தை சேர்ந்த அஞ்சுகுமார் ரெட்டி உள்பட 7 பேர் சேர்ந்து கடத்தி சென்றுள்ளதாக காரடகி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியையும், அவரை கடத்திய மர்மநபர்களையும் தேடிவந்தார்கள்.

    இந்த நிலையில், வழக்கு விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கணவர் மல்லனகவுடா மற்றும் காயத்ரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமார் மறுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. காதல் விவகாரம் அல்லது திருமணம் பிடிக்காததால் மாயமாகி இருக்கலாம். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.’ என்றார்.

    இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் காயத்ரி, அஞ்சுகுமாருடன் நேற்று மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர், அவர் சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமாரிடம் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை யாரும் கடத்தவில்லை. எனது விருப்பத்தின் படியே அஞ்சுகுமாருடன் சென்றேன். நானும், அஞ்சுகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதுபற்றி அறிந்த எனது குடும்பத்தினர் தாலியை கழற்றி எறிந்துவிட்டு உறவினர் மல்லனகவுடாவுடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    எனது பிடிவாதத்தால் முதலிரவை குடும்பத்தினர் தள்ளிவைத்தனர். இருப்பினும், கடந்த 7-ந் தேதி அவர்கள் முதலிரவுக்கு முகூர்த்தம் குறித்தனர். இதனால் அஞ்சுகுமாரை போன் செய்து வரவழைத்து அவருடன் சென்றேன். என்னை எனது முதல் கணவர் அஞ்சுகுமாருடன் சேர்த்து வைக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மல்லனகவுடாவுடன் நான் செல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயத்ரியின் கோரிக்கையை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #WomanMissing

    நெல்லையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து காதல் ஜோடி எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.
    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்திவருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டபோது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டைவிட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். இன்று காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். #tamilnews
    வடமதுரை அருகே சில நாட்களுக்கு முன் மாயமான பெண் தனது காதல் கணவருடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே போத்தாநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது20). இவர் வடமதுரை அருகே உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அவரது உறவினர்கள் மில்பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து வடமதுரை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் விஜயலட்சுமி அதேமில்லில் வேலை பார்த்த வடமதுரை கன்னிமார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரமேசை சில ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி பழனிமுருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

    தற்போது போலீசார் தேடுவதை அறிந்து பாதுகாப்பு கேட்டு இங்கு வந்தோம் என்றார். போலீசார் இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரையும் அழைத்து சமரசபேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×