search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested gang"

    முத்துப்பேட்டை அருகே மீனவர்களை தாக்கி வலைகளை சேதப்படுத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 7 பேர் கும்பல் நேற்று முன்தினம் இரவு ஜாம்புவானோடை படகு துறையில் மதுபோதையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்தினர். இதை பார்த்த அங்கு நின்ற மீனவர்கள், அவர்களை கண்டித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

    இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அந்த கும்பல், தங்களது ஆதரவாளர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் நள்ளிரவில் ஜாம்புவானோடை படகு துறைக்கு சென்று அங்கிருந்த மீனவர்களின் படகுகள் வலைகள், சைக்கிள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் அந்த பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை அரிவாளால் வெட்டினர். சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் குணசேகரன்(வயது 48), ராமமூர்த்தி(44), பெரியசாமி(40), பத்மநாதன்(45) ஆகிய 4 பேருக்கு உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மீனவர்கள் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மீனவர்களை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜாம்பவனோடை பகுதியை சேர்ந்த வினோத் (22), விக்னேஸ்வரன் (23), மணிகண்டன் (24), வசந்த குமார் (25), பழனிமுருகன் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை அருகே ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு பொம்மன அள்ளி அருகே மங்கமனப் பான்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ரவுடியான இஸ்மாயில் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்மாயில் நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் நஷீர் என்பவரை சந்திப்பதற்காக தனது காரில் வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் ஒரு கும்பல் வந்துள்ளது. தேன்கனிக்கோட்டை வந்த இஸ்மாயில், நஷீரின் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலின் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

    இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ் பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக முன் விரோதத்தில் இஸ்மாயில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக் கோட்டை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த பெங்களூரை அடுத்த பொம்மியன அள்ளி பகுதியைச் சேர்ந்த சையத் இஸ்ராத் (22), சையத் இர்பான் (27), முனவர்(27), சையத் இணையத் (22), சம்சுதீன் (30), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த நஷீர் உள்பட 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    அதில், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக முன்விரோதத்தால் இஸ்மாயிலை 6 பேரும் சேர்த்து 2 கார்களில் பின் தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்தோம் என்றனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த கவுஸ் என்பவருக் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    அவர் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள கவுசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளான கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், அருணாசலேஸ்வரர் கோவில் என பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடைபெற்று உள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன், டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சகரவர்த்தி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் தனி குழு அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், சிவசங்கரன், மகாலிங்கம், பஞ்சமூர்த்தி, புருசோத்தமன் மற்றும் போலீசார் தனித்தனியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் செல்லும் வழியில் உள்ள ரிங் ரோட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மோட்டார் சைக்கிளில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் திருவண்ணாமலை தேனிமலையை சேர்ந்த ஜிட்டி செல்வராஜ் (வயது 27) என்பதும், மற்றவர்களில் 2 பேருக்கு 17 வயது, ஒருவருக்கு 14 வயது என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் திருவண்ணாமலை, சந்தவாசல், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 22 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும், அதற்கு அவர்கள் கள்ள சாவி மட்டுமே பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    ×