search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup football"

    • அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • 35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.

    சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பாரீஸ், பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்ஜிமா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

    35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் அணியின் இருந்து விலகினார்.

    2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான பென்ஜிமா 97 போட்டிகளில் ஆடி 37 கோல்கள் அடித்துள்ளார். அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் முறையாக டி.வி. பார்வையாளர்களை கடந்து இந்தியாவில் புதிய சாதனை
    • இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எங்கு பார்த்தாலும் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது

    கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியை உலகம் முழுவதும் மொத்தம் சுமார் 150 கோடி பேர் வரை பார்த்து இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டெலிவிஷன் சேனலிலும், ஜியோ சினிமா தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதிப் போட்டியை இந்தியாவில் 11 கோடி பேர் டிஜிட்டல் வழியில் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாகும்.

    இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா தளத்தில் இந்த ஆட்டத்தை 3.2 கோடி கண்டு களித்துள்ளனர்.

    ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா என இரண்டிலும் சேர்த்து 4 கோடி நிமிடங்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பார்க்கப்பட்டுள்ளது.

    • கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.
    • மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போதெல்லாம் கேரளாவில் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் குழுவாக பிரிந்து தங்கள் ஆதரவு அணிகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் அமைப்பது என கேரளாவையே களைகட்ட வைப்பார்கள்.

    அந்த வகையில் இப்போது நடந்த உலக கோப்பை போட்டிக்காக கோட்டயம், திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட் அவுட்வைத்து அசத்தினர். இதற்கு போட்டியாக பிரேசில் வீரர் நெய்மருக்கும் ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதனை கேரளாவில் உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஒரு கட்டத்தில் இந்த உற்சாகம் வன்முறையாக வெடித்தது.நள்ளிரவு 12.30 மணி அளவில் கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.

    இதில் கால்பந்து ரசிகர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
    • மம்முட்டி, மோகன்லால் புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

    அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
    • உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.messi, world cup football, மெஸ்சி, உலக கோப்பை கால்பந்து

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்தார்.

    அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.

    அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.

    35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு கோபா அமெரிக்க கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தற்போது உலக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். மரடோனாவை போலவே மெஸ்சியும் அர்ஜென்டினாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்துள்ளார். எந்த ஒரு வீரரும் உலக கோப்பையில் அனைத்து நிலைகளிலும் கோல் அடித்தது இல்லை.

    இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்சிக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது.

    உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.

    மெஸ்சி ஒட்டு மொத்த உலக கோப்பைகளிலும் சேர்த்து 13 கோல்கள் அடித்துள்ளார். 26 ஆட்டத்தில் அவர் இந்த கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.

    குளூஸ் (ஜெர்மனி) 16 கோல்களுடன் முதல் இடத்திலும், ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்களுடன் 2-வது இடத்திலும், ஜெரார்டு முல்லா (மேற்கு ஜெர்மன்) 14 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்சை சேர்ந்த பாண்டைனுடன் இணைந்து மெஸ்சி 4-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 13 கோல்கள் அடித்துள்ளனர்.

    உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். அவர் 26 ஆட்டத்தில் ஆடி லோத்தர் மேத்யூசை (ஜெர்மனி) முந்தினார். மேத்யூஸ் 25 ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

    உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்சி படைத்தார். அவர் மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் ஆடியதே சாதனையாக இருந்தது. மெஸ்சி தற்போது அவரை முந்தியுள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சி கால்பந்தில் அனைத்து காலக்கட்டத்திலும் தான் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் கோப்பையை கைப்பற்றி சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

    • அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கிறது.
    • 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை நடைபெறவில்லை.

    கத்தாரில் நேற்று முடிவடைந்த 22-வது உலக கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தியது.

    அடுத்த உலக கோப்பை போட்டியை வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா , மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் தடவையாக 3 நாடுகள் போட்டியை நடத்த உள்ளது. 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். எஞ்சிய 45 அணிகளும் தகுதி போட்டிகள் மூலம் தகுதி பெறும்.

    மொத்தம் உள்ள 48 நாடுகளும் 16 பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெறும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் நாக் அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு முன்னேறும். 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து 3-வது சுற்று, கால்இறுதி , அரை இறுதி, இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 80 ஆட்டங்கள் 16 நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆனாலும் இந்த போட்டி முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    மெக்சிகோவில் 3-வது முறையாக உலக கோப்பை நடக்கிறது. இதற்கு முன்பு 1970, 1986-ல் நடந்தது. இதன் மூலம் உலக கோப்பையை 3-வது தடவையாக நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது. அமெரிக்காவில் இதற்கு முன்பு 1994-ல் நடந்தது. கனடாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

    1954 முதல் 1978 வரை 16 நாடுகள் பங்கேற்றன. 1982-ல் 24 நாடுகளாக உயர்த்தப்பட்டன. 1998-ல் நாடுகள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்டது. இனி வரும் உலக கோப்பை போட்டியில் நாடுகள் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
    • 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் இருந்தது.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.


    கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு ரசித்தனர்.

    • ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் கோல் அடித்தார்.
    • 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார்.

    பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இறுதி ஆட்டம்.
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

    எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை  கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    • தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    • மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்றது. தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்றது.

    கோஸ்டாரிகா 6-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் வடஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

    ×