search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IND vs AUS"

    • சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கங்குலி குறிப்பிட்டார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவரை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு 4 வேகப்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அஸ்வினை நீக்கியது கடினமான முடிவு என்றும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கங்குலி, ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் தனது டுவிட்டர் பதிவில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி கூறும்போது, "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை 11 பேர் கொண்ட அணியில் தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நிக்கி பாண்டிங் கூறும்போது, "ஆடுகள தன்மையை பொறுத்து வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஆவார்" என்றார்.

    • ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும்.
    • ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியாவுக்கு 270 ரன் இலக்காக இருந்தது.

    மிச்சேல் மார்ஷ் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), டிரெவிஸ் ஹெட் 33 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணியால் 270 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. 49.1 ஓவரில் 248 ரன்னில் 'ஆல்அவுட்' ஆகி இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    விராட் கோலி 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்னும் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், ஆஸ்டன் அகர் 2 விக்கெட்டும், ஸ்டோனிஸ், அபோட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த தோல்வியால் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தனர்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    269 ரன் என்பது அதிகமான ஸ்கோர் இல்லை. 2-வது பாதியில் ஆடுகளம் கொஞ்சம் சவாலாகவே இருந்தது. ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதை செய்ய நாங்கள் தவறிவிட்டோம்.

    இதுபோன்ற ஆடுகளத்தில் தான் நீங்கள் (பேட்ஸ்மேன்கள்) பிறந்து வளர்ந்து இருப்பீர்கள். இந்த பிட்சில் பொறுமையாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இந்த போட்டியில் தொடக்கம் நன்றாக இருந்தது. ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

    இது ஒட்டுமொத்த அணியின் தோல்வியாகும். இந்த தொடரில் இருந்து பல விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் 30 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறும்போது, "இந்த சுற்றுப் பயணம் மகிழ்ச்சியானது. டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு நாங்கள் போராடிய விதம் நன்றாக இருந்தது. இந்த ஆட்டத்தில் விக்கெட் சரிந்ததால் 220 ரன்களை எடுக்க மாட்டோம் என்று நினைத்தோம். எங்களது பின் கள வீரர்கள் நன்றாக ஆடி 269 ரன்னுக்கு கொண்டு வந்தனர் என்றார்.

    • ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள்.
    • உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி தோல்வியை மறந்துவிடக்கூடாது.

    ஆஸ்திரேலியாவிடம் தோற்று சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது தொடர்பாக முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியா பீல்டிங்கில் கடும் நெருக்கடி கொடுத்தது. கோலி-ராகுல், ரோகித் சர்மா-சுப்மன்கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை தவிர இந்தியாவால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இதுதான் தோல்விக்கு காரணமாகும்.

    270 முதல் 300 ரன் இலக்கு இருக்கும் போது 90 அல்லது 100 ரன் பார்ட்னர்ஷிப் அவசியமானது.

    ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மிகவும் நன்றாக இருந்தது. இதுதான் இரு அணிகளுக்கான வித்தியாசமாகும்.

    ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள். இதனால் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது.

    ஆஸ்திரேலியாவை உலக கோப்பையில் மீண்டும் சந்திக்க நேரிடும். அப்போது இதுபோன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால் கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் நடைபெறும் ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    • இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

    சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்டை போலவே ஒரு நாள் தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உள்ளது.

    இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர். இதனால் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

    இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்க்கும் ஆவலில் காலையில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டனர்.

    நேரம் செல்ல செல்ல அதிக அளவிலான ரசிகர்கள் சேப்பாக்கம் பகுதியில் குவிந்தனர். 11 மணி அளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதாவது போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் உள்ள வாலாஜா ரோடு, பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலை பகுதிகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் ரசிகர்கள் நின்று ஸ்டேடியத்திற்குள் நுழைந்தனர்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களும், போலீசாரும் இணைந்து ரசிகர்களுக்கு எந்த நுழைவு வாயில் வழியாக ஸ்டேடியத்திற்குள் செல்ல வேண்டும் என்று டிக்கெட்டுகளை பார்த்து அனுப்பி வைத்தனர். டிக்கெட் இல்லாத ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தில் ஸ்டேடியத்தை சுற்றி வலம் வந்தனர்.

     


    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டேடியத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வீரர்கள் தங்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மேலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஸ்டேடியத்துக்குள் சோதனை நடத்தப்பட்டது.

    அண்ணாசாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போட்டியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களுக்காக இலவச மினி பஸ் வசதிக்கும் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும். இந்த சேவை இன்று மட்டும் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்குகிறது.

    • 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
    • 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 1 ரன் குறைவாகும். அக்ஷர் படேல் 74 ரன்னும், வீராட் கோலி 44 ரன்னும் எடுத்தனர்.

    நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் சாய்த்தார். மர்பி , மேத்யூ குனேமேன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது.

    உஸ்மான் கவாஜா 6 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார். டிரெவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுஷேன் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

    சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    டிரெவிஸ் ஹெட் 43 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டீவ் சுமித் 9 ரன்னிலும், அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தனர். லபுஷேன் 35 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    இருவரும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ரென்ஷா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். ஹேண்ட்ஸ்ஹோம் (0), கேப்டன் கம்மின்ஸ் (0) ஆகியோரை ஜடேஜா அவுட் செய்தார்.

    அதைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி (7 ரன்), லயன் (8), மேத்யூ குனேமேன் (0) ஆகியோர் ஜடேஜாவின் அபார பந்து வீச்சுக்கு வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணி 31.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 115 ரன் இலக்காக இருந்தது.

    ஜடேஜா 42 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் அவர் 3 விக்கெட் எடுத்து இருந்தார். அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    115 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது.

    இந்திய அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக இருந்தது. லோகேஷ் ராகுல் 1 ரன்னில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 115 ரன் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    • தர்மசாலா ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற இருந்த 3-வது டெஸ்ட் போட்டி மாற்றப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை. மேலும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் தர்மசாலாவில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி மாற்றம் செய்யப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஆடுகள பராமரிப்பாளர் தபோஸ் சட்டர்ஜி ஆடுகளம் குறித்த அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது.

    ×