என் மலர்
வழிபாடு

விளக்கொளி பெருமாள்
ஜோதி வடிவில் காட்சி தந்த பெருமாள்
- கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
- புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா (தூப்புல்) இடத்தில் அமைந்துள்ளது விளக்கொளி பெருமாள் கோவில். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 45-வது திருத்தலமாகும். இக்கோவில் மூலவர் விளக்கொளி பெருமாள், தீபப் பிரகாசர், திவ்ய பிரகாசர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி தாயார்.
ஒரு சமயம் பிரம்மதேவர், 'பூலோகத்தில் தனக்கு கோவில் இல்லையே' என்பதை நினைத்து வருந்தினார். இதனால் சிவபெருமானை நினைத்து பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். மனைவியுடன் இணைந்துதான் யாகம் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மதேவர், சரஸ்வதி தேவியின் துணையில்லாமல் யாகம் நடத்த தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி தேவி, யாகத்தை தடுக்க எண்ணி உலகத்தையே இருளில் மூழ்க செய்தார்.
இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு பகவான், பிரம்மனின் கோரிக்கையை ஏற்று, ஜோதி வடிவில் காட்சி தந்து யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எனவே தான் இங்குள்ள இறைவன் 'விளக்கொளி பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். பின்பு பிரம்மதேவர், சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார்.
இந்த ஆலயம் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலில் லட்சுமி, ஹயக்ரீவர், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் சன்னிதி உள்ளன. கோவிலுக்கு வெளியே சரஸ்வதி தீர்த்தம் காணப்படுகிறது.
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அவ்விழாவில் வேதாந்த தேசிகர், வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார். கல்வியில் சிறக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.






