என் மலர்tooltip icon

    கோவில்கள்

    புதுக்கோட்டை அருகே உள்ளது மலையக்கோவில். ‘மலையில் கோவில்’ என்ற பெயரே தற்போது ‘மலையக்கோவில்’ என மருவி வழங்கப்படுகிறது.
    புதுக்கோட்டை அருகே உள்ளது மலையக்கோவில். ‘மலையில் கோவில்’ என்ற பெயரே தற்போது ‘மலையக்கோவில்’ என மருவி வழங்கப்படுகிறது. இவ்வூர் முன்பு ‘ஒருக்கொம்பு மலை’, ‘குறிஞ்சி கொத்த நாவல் குறிச்சி’, ‘திருநாவலங்கிரி’, ‘திருவோதிக்கால்’ என்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளது.

    மலையின் மீது ஒரே சுற்று மதிலுக்குள் முருகப்பெருமானுக்கும், முருகனது இணையடி பற்றி நின்ற இடும்பனுக்கும் எழுப்பப்பட்ட கோவில்கள், ஒரு குறுக்குச்சுவரால் தனித்தனிக் கோவில்களாகக் காட்சியளிக்கின்றன. மலையின் மீதுள்ள கோவில் ‘மேற்கோவில்’ என்றும், மலையின் கீழுள்ள கோவில் ‘கீழ்க்கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கோவிலுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோவில்களும், தெற்குக் குடவரை கோவிலுக்கு எதிரில் ஆடவல்லானான சிவபெருமானின் தேவியாகிய உமையவளுக்கு கற்கோவிலும் அமைந்திருக்கிறது.

    மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு குடவரைக் கோவில்களில் கிழக்கு குடவரைக் கோவில் ஒரே கருவறையையும், கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத்தையும் கொண்டதாகும். இக்கோவிலுள்ள சிவலிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. தெற்கு குடவரைக் கோவில் கருவறையையும், கருவறைக்கு முன்பாக முன் மண்டபத்தையும், அதை ஒட்டி மகா மண்டபத்தையும் கொண்டிருக்கிறது.

    கிழக்கு குடவரை ஆலயத்தில் உள்ள லிங்கத்திற்கு முன்பாக கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகர் உருவம் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விநாயகர் பிள்ளையார்பட்டி விநாயகரின் வடிமைப்புக்கு இணையானதாக சொல்லப்படுகிறது. கிழக்குக் குடவரைக்கோவிலின் வாயிற்படிக்கு தென்புறத்தில் பல்லவ கிரந்த எழுத்தமையில் ஒரு கல்வெட்டும் வாயிற்படிக்கு வடக்கில் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது. தெற்குக் கல்வெட்டு பரிவாதினி என்ற வீணையைப்பற்றிய சிறு குறிப்பை காட்டுகிறது.

    இது போன்று கல்வெட்டு குறிப்பு குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குடவரையின் அமைப்பு, லிங்கத்தின் வடிவமைப்பு, குடவரை மண்டபத்தூணின் அமைவு, பல்லவ கிரந்த எழுத்தமையில் கல்வெட்டு முதலியவைகளை பார்க்கும்போது இக்குடவரை கி.பி. 7 அல்லது 8-ம் நூற்றாண்டிற்குரியனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்குடவரையை பற்றி ஆராய்ச்சியாளர்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    மலைமீதுள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர்

    இவ்விரு குடவரையிலுள்ள குலசேகரபாண்டியன், இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில் இருந்து மலையக்கோவில் கானாட்டிற்கும் கோனாட்டிற்கும் பொது எல்லையில் அமைந்திருந்தது என்பதை அறியமுடிகிறது. இக்காரணத்தால் தான், கிழக்கு குடவரை கானாட்டை நோக்கியவாறு கிழக்கு நோக்கியும், தெற்குக் குடவரை கோனாட்டை நோக்கியவாறு, மேற்கு நோக்கியும், லிங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திசையில் இருக்கும் சிவனை வேண்டினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அதைவிட ஒவ்வொரு பிரதோஷம் நாளில் அந்த சிவனையும் அதற்கு எதிரே உள்ள வலம்புரி விநாயகரையும் வேண்டினால், தடைபடும் காரியங்கள் சுமுகமாக முடியும் என்பது நம்பிக்கை. இந்த இறைவன் திருவேங்கை கனலீசுபவர், மலையலிங்கம் என்று அழைக்கப்பட்டு, இன்றைக்கு திருவருட் காளீஸ்வரர் எனப்படுகிறார். அம்மனுக்குரிய கற்கோவில் வடக்கை நோக்கிய நிலையில் பிற்காலச்சோழர்களது கலைப்பாணியில் அமைந்துள்ளது. இவ்வம்மை தம்பிராட்டி, அறம்வளர்த்தநாயகி என்று பெயர் கொண்டு விளங்குகிறாள்.

    மலையில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கிழக்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்புரிகிறார். ஜடாமுனீஸ்வரர் தெற்கே பார்த்து இருக்கிறார். இப்படி ஒவ்வொரு தெய்வங்களும் திசைமாறிய தெய்வங்களாக இக்கோவிலில் இருப்பது வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது. சிவன், ஐயனார் போன்ற சைவக்கோவில்களுக்கு நிலத்தை தானமாக அளிக்கும்போது அந்நிலம் கோவில் நிலம் என்பதற்கு அடையாளமாக சூலக்கல் நடுவது மரபாகும்.

    மலையக்கோவிலுக்கு அருகாமையில் இளங்கண்மாய் என்ற ஏந்தலின் உள்வாசல் மேட்டில், ‘முக்குடை, குத்துவிளக்கு, பூரணக்கும்பம்’ ஆகிய மங்கலச் சின்னங்கள் வரைகோட்டு உருவங்களாக பொறிக்கப்பட்டு, தரையில் ஊன்றப்பட்ட இரண்டு பலகைக் கற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையக்கோவிலில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. சமணப்பள்ளி இருந்ததற்கு ஆதாமலையக்கோவிலில் சடாமுனி, செம்முனி என்ற ஒரு தெய்வம் மக்களால் வணங்கப்படுவது ஆதாரமாக உள்ளது.

    அமைவிடம்

    புதுக்கோட்டையில் இருந்து மலையக்கோவிலுக்கு நேரடியாக நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறி மலையக்கோவில் விலக்கில் இறங்கி, 1 கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஆலயத்தை அடையலாம். 
    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தமிழகத்தில் நடுநாயகமாக விளங்கும் தென்பெண்ணை நதியின் தெற்கிலும், திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர், உலகளந்த பெருமாள் ஆலயங்களின் கிழக்கிலும், சுந்தரரால் பாடல் பெற்ற திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை என வழங்கப்படும் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கிலும் அமைந்திருக்கிறது பையூர் தட்சிணாமூர்த்தி ஆலயம்.

    இந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். மாமல்லபுரச் சிற்பக்கலை வல்லுநரால் உருவாக்கப்பட்டு, மிகப்பொலிவுடன் கூடிய 12 அடி உயரம் கொண்ட ஞானகுருவாக இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், இந்த ஆலயத்தின் கருவறை தரையில் இருந்து உச்சி கோபுர கலசம் வரை 27 அடியில் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் சிறப்பு ஆகும்.

    இங்கு குரு தட்சிணாமூர்த்தி வான் நோக்கும் வகையில் உயர்ந்த தோற்றத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலய நுழைவு வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் பெருமான் ஆதிசேஷனுடன் வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். புத்திரபேறின்மை, திருமணம் தள்ளிப்போகுதல், வேலை வாய்ப்பின்மை என பக்தர்களின் அனைத்து குறைகளையும் குரு தட்சிணாமூர்த்தி தீர்த்து வைக்கிறார். மேலும் இங்கு வரும் பக்தர்கள், குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்யலாம் என்பது, பக்தர்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றனர்.

    தென்பெண்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பையூர் தட்சிணாமூர்த்தியைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆலங்குடிக்கு அடுத்து தமிழகத்தில் தென்முகக் கடவுளுக்கென தனித்திருக்கும் ஆலயமாக இது அமைந்துள்ளது. வருகின்ற 4-ந் தேதி (வியாழக்கிழமை) குருப்பெயர்ச்சி அன்று, இக்கோவிலில் சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம், சங்கு, பரிகார கலச மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் குரு பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.

    பையூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் செல்ல, விழுப்புரத்தில் இருந்தும், திருக்கோவிலூரில் இருந்தும் ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

    -புகழேந்தி, வண்டலூர். 
    இத்தலம் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்கள், தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. நாகை மாவட்ட கிராமங்களில் இன்றும் சோழர்களின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கும் ஆலயங்கள் ஏராளம்.

    அப்படிப்பட்ட ஓர் ஆலயம் திருசொர்ணபுரம் என்ற கிராமத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது.

    ‘சொர்ணம்’ என்றால் ‘தங்கம்’ என்று பொருள். இந்தப் பெயர் இந்த ஊருக்கு வந்ததற்கு காரணம் உண்டு. இத்தலம் வந்த நால்வரில் ஒருவரான சுந்தரர், பொன் வேண்டி இறைவனை நோக்கி பாடினார். அவரது பாடலைக் கேட்ட இறைவன் சற்றே ஒளிந்து கொண்டார். ஆனால் இத்தல இறைவி சுந்தரருக்கு பொன்னை அள்ளித் தந்தாள்.

    சொர்ணத்தை அள்ளி தந்த இடம் என்பதால், இந்த ஊர் ‘திருசொர்ணபுரம்’ எனவும், இறைவி ‘சொர்ணாம்பிகை’ எனவும், இறைவன் ‘சொர்ணபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படலானார்கள்.

    சுந்தரரின் பாடல் கேட்டு இறைவன் சற்றே ஒளிந்ததால், இன்றும் கருவறை இறைவன் சற்றே இடதுபுறம் ஒதுங்கி அருள்பாலிக்கிறார்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று சுந்தரருக்கு, நாணயங்களால் கனகாபிஷேகம் நடைபெறும். அந்த நாணயங்களை ஆண்டு முழுவதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். தவிர, அட்சயத் திருதியை அன்று இறைவன் - இறைவிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த ஊர் பெண்கள் புதிதாக நகைகள் வாங்கினால், அதை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு, பின்னரே எடுத்துச் சென்று அணிகின்றனர். இதனால் அன்னை சொர்ணாம்பிகை, தங்கள் வீட்டில் மேலும் தங்கம் தழைக்கச் செய்வாள் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த ஊருக்கு ‘காத்திருப்பு’ என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்தப் பெயர் வரக் காரணமான புராணக் கதையும் ஒன்று உண்டு.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன் காத்யாயன என்ற முனிவர், மனைவியோடு இங்கு வசித்து வந்தார். அவருக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகள் இறைவனை நோக்கி தவமிருந்தார். இறைவன் மனம் இரங்கினார். பார்வதி தேவியே அவருக்கு மகளாக அவதரித்தார். தவமாய் தவமிருந்து பெற்ற மகளை, கண் இமை காப்பது போல் காத்து, வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு ‘காத்யாயினி’ என்று பெயரிட்டார்.

    காத்யாயினிக்கு திருமண வயது வந்தது. மணமகனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் தேவி. இறைவன், அம்பிகையை திருவீழிமிழலைக்கு வரச்சொல்லி அங்கேயே அவளை மணந்து கொண்டார். பின்னர் இறைவனுடன் இறைவி பிறந்தகமான இத்தலம் வந்தபோது, தங்களுடன் மழலை குறும்பர் என்ற அடியார் கொடுத்த விளாங்கனியையும் எடுத்து வந்தாள். அந்தக் கனியே இங்கு மரமாகி, இன்றும் ஆலய தலவிருட்சமாக தழைத்தோங்கி நிற்கிறது. இங்கு காத்யாயினி இறைவனுக்காக காத்திருந்ததால் இத்தலம் ‘காத்திருப்பு’ என அழைக்கப்படலாயிற்று. இன்றும் வழக்கத்தில் இந்தப் பெயரே நிலவுகிறது.

    ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம், பலிபீடம், கொடிமரம் உள்ளது. கொடிமரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். நந்தியும், பலி பீடமும் நடுவே இருக்க, உள்ளே கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இடதுபுறம் அன்னை சொர்ணாம்பிகை தனிக் கோவிலில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னை இறைவனுக்கு இடது புறம் அமர்ந்து கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், உத்ராட்ச மாலையையும் சுமந்தும், கீழ் இரு கரங்கள் அபய ஊரு ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அம்பிகை நின்ற கோலத்தில் இன் முகம் மலர அருள்பாலிக்கிறாள். அன்னை தன் கீழ் இரண்டு கரங்களில் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து, சொர்ண லட்சுமியாக காட்சி தருகிறாள்.

    கவுதம முனிவர் ஒரு முறை சந்திரனுக்கு சாபமிட்டார். அந்த சாபம் நீங்க, சந்திரன் இங்கு வந்து அன்னையிடம் முறையிட்டான். அன்னை சந்திரனின் சாபத்தை விலக்கி அருள் புரிந்தாள். இதனால், சந்திரனின் பிறை வடிவம் அன்னையின் சிரசில் காணப்படுகிறது. மேலும், அன்னைக்கு இங்கு கிரீடம் இல்லை. மாறாக, தலைமுடியே கிரிடமாக அமைந்துள்ளது.

    ஆலயத்தின் தல விருட்சம், மூன்று. வன்னி, வேம்பு, மாதுளை என இந்த மூன்று விருட்சங்களும் ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளன. ஆலய ஈசானிய பாகத்தில் உள்ள சொர்ண புஷ்கரணியே ஆலய தீர்த்தமாகும். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கிறார்கள். இந்த துர்க்கைக்கு எட்டு கைகள். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், வீணா தட்சிணாமூர்த்தி, வாசுகி, சப்த மாதர்கள், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் பைரவர், சண்டிகேஸ்வரர், கிழக்கில் சனீஸ்வரன், சூரியன், காத்யாயி லிங்கம் ஆகியவை உள்ளன.

    இத்தலத்தில் வன்னி, வேம்பு ஆகிய இரண்டு தல விருட்சங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னி வளர்ந்துள்ளன. பவுர்ணமி அன்று 27 விளக்கு ஏற்றி, இத்தல விருட்சங்களை வலம்வர திருமண தடை நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் திருமணம் விரைந்து நடந்தேற இறைவன் சன்னிதியில் சுயம்வர கலா பார்வதி யாகம் நடத்தினால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

    வைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் கொடியேற்றத்துடன் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவம் விசேஷமானது. கார்த்திகை சோம வாரங்களில் இறைவன் இறைவிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை, யாகதோஷம் போன்ற நாட்களில் ஆலயம் பக்தர்களால் நிரம்பி நிற்கும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    நாகதோஷம் நீக்கும் தலம்

    ஒரு சமயம் மயூர விநாயகரின் சாபத்தால், சர்ப்ப ராஜனான வாசுகி தன் பலம் முழுவதையும் இழந்தது. இழந்த பலத்தை மீண்டும் பெற என்ன செய்வது என்று புரியாது தவித்த வாசுகி, மகாவிஷ்ணுவை நாடியது. மகாவிஷ்ணு ‘காவிரி ஆற்றங்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சொர்ணபுரீஸ்வரரை வணங்கி வா’ என்று வாசுகியை பணித்தார்.

    அதன்படி வாசுகி இத்தலம் வந்து, இங்கு அருள்பாலிக்கும் இறைவன் இறைவியை பல மண்டலம் பூஜை செய்து இழந்த பலத்தை மீண்டும் பெற்றதாக செவி வழி தல வரலாறு ஒன்றும் சொல்லப்படுகிறது. எனவே, இத்தலம் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.

    அமைவிடம்


    நாகை மாவட்டம் சீர்காழி- காரைக்கால் பேருந்து சாலையில், சீர்காழியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது காத்திருப்பு கிராமம். 
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.
    மேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.

    ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.

    நந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா?’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி! நந்தனார் வந்திருக்கிறார்’ என்றனர்.

    இன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா? நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

    இப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.

    புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.

    புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.

    இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.

    இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

    கருவறையில் இருந்து விலகி இருக்கும் நந்தி

    நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.

    இந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.

    வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    பஞ்ச லிங்கங்கள் :

    ஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும் ‘அழகில் யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு அம்பாளும் சம்மதித்தார். அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக மாறியதாக தல புராணம் சொல் கிறது. இந்த பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமண வரம், நாகதோஷ நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது.

    அமைவிடம் :


    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில். 
    பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான தலம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான திருத்தலம், பராந்தகச் சோழன் திருப்பணி செய்த திருக்கோவில், கர்ப்பதோஷம், களப்பிர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் தீர்க்கும் தலம், புன்னகை பூத்த பெருமாள் வாழும் கோவில், மகாபாரதம், ராமாயணம், பாகவதக் காட்சிகள் கொண்ட சிற்பங்கள் நிறைந்த கோவில், திராவிட கட்டிடக்கலை கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.

    திருக்கோவிலூர், ஆதிதிருவரங்கம், திருவல்லிக்கேணி, திருவந்திபுரம், திருபுவனை ஆகிய பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றாக திகழ்வது திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம். இத்தலம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-950) கட்டப்பட்டதை வரலாறு எடுத்துரைக்கிறது. ‘வீரநாராயண விண்ணகரம்’ என்பது இக்கோவிலின் ஆதி பெயராகும். பராந்தகனின் விருதுப்பெயரே வீரநாராயணன். இதேபோல, மன்னனின் முதல் மனைவியின் பெயரால் ‘திருபுவனை மகாதேவிச் சதுர்வேதிமங்கலம்’ எனவும் இத்தலம் அழைக்கப்பட்டது.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய எளிய திருக்கோவில் இது. நுழைவுவாசல், ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. பலிபீடத்தை அடுத்து கருடன், பெருமாளை வணங்கியபடி காட்சி தருகிறார். அவரையொட்டிக் கருங்கல்லில் ஆன மகாமண்டபம், கருவறை முன் மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

    சுவாமி கருவறை, முன்மண்டபத்தின் கோட்டங்களில் சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது. நடுப் பகுதியில் நேர்த்தியான சிற்பங்கள் அணிவகுக்கின்றன. அதில், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் காவியக் காட்சிகள், புடைப்புச் சிற்பங்களாக காட்சிதருகின்றன. மற்றொரு புறம், நரசிம்மரின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கலைநயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    பெருமாளின் கருவறை விமானம் ‘விரானூர் பூமீஸ்வரர்’ மற்றும் ‘காஞ்சீபுரம் கவுகீஷ்வரர்’ திருக்கோவிலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மண்டபம் ஏறும் படிகள் ஒருபுறம் சிங்கங்கள், மறுபுறம் யானைகளின் அணிவகுப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கருவறை முன்மண்டபத்தில் இருபுறமும் குபேரன் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன் துவாரபாலகர்கள் காவல்புரிகின்றனர். பின்புறம் தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

    இங்குள்ள மூலவர் தோத்தாத்திரி பெருமாள் ஆவார். இவரே தமிழில் ‘தெய்வநாயகப்பெருமாள்’ என்று வழங்கப்படுகிறார். சுகாசன கோலத்தில் ஒரு காலை மடக்கி, மறுகாலைத் தொங்கவிட்டு, மந்தகாசப் புன்னகை பூத்து எழிலாகக் காட்சியளிக்கின்றார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். பெருமாளின் திருமுகம், அதில் உள்ள அவயங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன. உற்று நோக்குவோரே இதை உணர முடியும். உற்சவத்திருமேனிக்கு ‘வரதராஜப்பெருமாள்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

    \
    தோத்தாத்திரி பெருமாள்

    சுவாமி சன்னிதியின் தென்மேற்கில் பெருந்தேவி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. தாயாரும் சுகாசனத்தில் அருள்காட்சி வழங்குகின்றாள். வடகிழக்கில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இரு சன்னிதிகளிலும், மூலவருக்கு அருகில் உற்சவத் திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன.

    கருவறைச் சுற்றில் மகாபாரதம், பாகவதக் காட்சிகள், கருடாழ்வார் அருகே மூன்று பெண்கள், நான்கு கால்களில் மூவராக அமைந்துள்ள சிற்பம் வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கின்றன.

    ந்த ஆலயத்தில் தைமாதம் முதல்நாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரி, சன்னியாசி குப்பத்தில் மாப்பிள்ளை சாமியாக சென்று, அங்கே வரவேற்பை பெறுதல், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    பழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்திய தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் நடை திறந்து வைக்கப்படும்.

    குரு, சுக்ரன் ஐக்கிய தலம் :

    திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி, 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.

    கருவறை பிரகாரம் :


    கருவறையில் மூலவர் வீற்றிருப்பதும், அவருக்கு எதிரில் பக்தர்கள் வணங்கும் விதமாக கட்டமைப்பு அமைந்திருப்பதும் ஆலயங்களில் நாம் காணும் பொதுவான அமைப்பு. ஆனால் திருபுவனையில் கருவறையை ஒட்டி சுற்றி வரும் விதமாக, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது, இத்தலத்தின் தனிச்சிறப்பு. வேண்டுதலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நெய் தீபங்கள் ஏற்றியபின், 48 சுற்றுகள் இந்த பிரகாரத்தில் தான் சுற்றி வரவேண்டும்.

    பரிகாரத் தலம் :

    இத்தலம், தோஷங்கள் தீர்க்கும் கண்கண்ட தலமாக விளங்குகின்றது. குறிப்பாக களப்பிரதோஷம், கர்ப்பதோஷம் மற்றும் சகோதர ஒற்றுமை, கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது. குறிப்பாக, கர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், தங்கள் வயதிற்கு ஏற்றபடி எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வசதி இல்லாதவர்கள் ஐந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 முறை சுற்றி வரவேண்டும். இதற்கான பலன் தரும் நேரமாக, புதன் ஓரையில் வியாழன் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைவிடம் :

     
    புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனை திருத்தலம். புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு- விழுப்புரம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும் திருபுவனை உள்ளது. திருபுவனையில் இருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் தோத்தாத்திரி பெருமாள் ஆலயம் இருக்கிறது.
    மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கி, மனமகிழ்ச்சி தரும் கோவிலாகக் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் கண்ணம்புழா பகவதி கோவில் அமைந்திருக்கிறது.
    மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கி, மனமகிழ்ச்சி தரும் கோவிலாகக் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் கண்ணம்புழா பகவதி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில், ஒருவர் தனக்குத் தேவையான சில மூலிகைச் செடிகளைத் தேடிக் காட்டிற்குள் சென்றார். அங்கே வழியில், ஓரிடத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதராக மண்டிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புதரை அகற்றுவதற்காக, தனது கையில் வைத்திருந்த அரிவாளை அங்கிருந்த ஒரு பாறையில் தேய்த்துக் கூர் தீட்டத் தொடங்கினார்.

    அப்போது, அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. அதனைக் கண்டு அச்சமடைந்த அவர், அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வந்து, தான் கண்ட காட்சியை ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்பாறையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதனைக் கண்டு அச்சமுற்ற அவர்கள், அருகிலுள்ள ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து விளக்கம் கேட்டனர். ஜோதிடர் சில குறிப்புகளைக் கொண்டு, அந்த இடத்தில் பகவதியம்மன் தோன்றியிருப்பதைத் தெரிவித்தார். அந்த இடத்தில் இருக்கும் அம்மனுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்தால், ரத்தம் வழிவது தானாக நின்றுவிடும் என்றும் தெரிவித்தார்.

    ஊர்க்காரர்களும் அந்தப் பாறையைப் பகவதியம்மனாக நினைத்து வழிபடத் தொடங்கினர். அந்தப் பாறையில் இருந்து வழியும் ரத்தமும் நின்றது. அதன் பிறகு, அந்தப்பாறை சிறிது சிறிதாக வளர்ந்து அம்மன் சிலையாக உருமாறியதாக கோவில் வரலாறு சொல்லப்படுகிறது.

    கண்ணம்புழா பகவதி அம்மன்

    கண்ணன்புழா பகவதி :

    பிற்காலத்தில், இக்கோவிலில் தெக்கேடத்து மனையைச் சேர்ந்த நம்பூதிரிகள் பூஜைகளைச் செய்யத் தொடங்கினர். அவர்களது நிர்வாகத்தில் இருந்தபோது இந்த அம்மன், ‘தெக்கேடத்து முல்லைக்கல் பகவதி’ என்று அழைக்கப்பட்டாள். மலையாள நாட்காட்டியின்படி 1096-ம் ஆண்டில் இந்தக் கோவில் சீரமைக்கப்பட்டு, கோவிலைச் சுற்றிலும் பிரகாரங்கள் அமைக்கப்பட்டது என்கின்றனர்.

    இக்கோவிலுக்குள் உயர்வகுப்பினர் மட்டுமின்றி அனைத்து வகுப்பினரும் சென்று வழிபடலாம் என்கிற நுழைவு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, இக்கோவில் இப்பகுதி மக்களின் வழிபாட்டுக்குரிய முதன்மைக் கோவிலாகவும் மாற்றம் பெற்றுவிட்டது. முல்லைக்கல் பகவதி என்றழைக்கப்பட்டு வந்த இக்கோவில், கண்ணன் கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பதால் ‘கண்ணன்புழா பகவதி கோவில்’ என்று பெயர் மாற்றம் பெற்று, அதுவே ‘கண்ணம்புழா பகவதி அம்மன்’ என்றாகிப்போனது.

    ஆலய அமைப்பு :

    சாலக்குடி ஆற்றின் வடகரையில், தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கில் அமைந்திருக்கும் இக்கோவில் கருவறையில், பகவதி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். ஆலய வளாகத்தில், சிவபெருமான், ஐயப்பன், விஷ்ணு, பத்திரகாளி, துர்க்கா மற்றும் நாகராஜா, நாகதேவதை ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் 21-ம் நாள் முதல் சபரிமலை விரதக் காலத்தில், வரநாட்டுக் குறுப்பின் களம் எழுத்து பாட்டு சடங்கு நடத்தப்பெறுகிறது. இந்நாட்களில் தினசரி நிறமாலையும் உண்டு.

    கன்னி (புரட்டாசி) மற்றும் துலாம் (ஐப்பசி) மாதங்களில் வரும் நவராத்திரி நாட்களில் நிறமாலை மற்றும் குருதி எனப்படும் வண்ணக்கலவை ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும், கோவில் நிறுவப்பட்ட நாளான மகரம் (தை) மாத ஹஸ்தம் நட்சத்திர நாளிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில் தீபக்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பெறுகின்றன.

    கும்பம் (மாசி) மாதம், இரவு நேரம் அதிகமாக வரும் அஸ்வதி நட்சத்திர நாளில் இக்கோவிலின் சிறப்புத் திருவிழா நடக்கிறது. இந்நாளில் ஐந்து அல்லது ஏழு யானைகளுடன் அம்மன் தெக்கேடத்து மனையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறார்.

    இக்கோவில் இறைவியான பகவதியை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதிலுள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி, மனத்துணிவுடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்கள், எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியும் என்கின்றனர். இக்கோவிலில் திருமணத்தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிச் செல்கின்றனர்.

    பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில்

    பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில் தோற்றம் :

    கண்ணம்புழா கோவிலின் வடக்குப் பகுதியில், தெக்கேடத்து மனையின் வளாகத்தில், கண்ணம்புழா பகவதி கோவிலின் துணைத்தேவதை எனப் போற்றப்படும் ‘பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில்’ ஒன்று உள்ளது. இக்கோவில் இங்கு அமைக்கப்பட்டது ஏன்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    முந்தைய காலத்தில் ஒரு நாள், தெக்கேடத்து மனையைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கொட்டியூர் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, வீடு திரும்பச் சிறிது காலதாமதமாகி விட்டது. அடர்த்தியான காட்டுப்பகுதி வழியாக, இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த அவர், அச்சத்தில் நடுங்கியதுடன், வழி தெரியாமலும் தடுமாறினார்.

    உடனே அவர், கண்ணம்புழா பகவதியை மனதில் நினைத்து வணங்கியபடி சென்றார். அப்போது, சிறிது தொலைவில் அவருக்கு முன்பாக ஒரு பெண் கையில் விளக்கு ஏந்திச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அர்ச்சகரும், அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து நடந்து சென்றார்.

    எந்த ஆபத்தும் இல்லாமல் காட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்ற அவர், தனக்கு வழிகாட்டியாய் வந்த பெண், கண்ணம்புழா பகவதி என்பதை அறிந்து, தனக்கு வழிகாட்டிய உருவத்தை மனதில் கொண்டு தேவி உருவச்சிலை ஒன்றைச் செய்து, தனது வீட்டு வளாகத்தில் இருந்த பாறையின் மீது நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். பிற்காலத்தில் அந்த அம்மனே ‘பாறைப்புறத்து பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டார்.

    இந்தக் கோவிலில், மலையாள நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைதிறக்கப்பட்டு பூஜை செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயம் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. திருச்சூர் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாலக்குடி நகருக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து அதிக பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம்.
    பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

    சித்திரை மாதத்தில் ஸ்நாதனாஷ்டமி, வைகாசி மாதத்தில் சதாசிவாஷ்டமி ஆனி மாதத்தில் பசுபதாஷ்டமி, ஆடி மாதத்தில் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதத்தில் ஸ்தானுவாஷ்டமி, புரட்டாசி மாதத்தில் சம்புகாஷ்டமி, ஐப்பசி மாதத்தில் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதத்தில் ருத்ராஷ்டமி, மார்கழி மாதத்தில் சங்கராஷ்டமி, தை மாதத்தில் தேவ தேவாஷ்டமி, மாசி மாதத்தில் மகேச்வராஷ்டமி, பங்குனி மாதத்தில் திரியம்பகாஷ்டமி என்ற பெயர்களில் இந்த அஷ்டமி அழைக்கப்படுகின்றது.

    சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு. அவர்கள் ‘பஞ்ச குமாரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள். பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள்.

    அசுர கணங்கள் பூலேகத்துக்கும், தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரை தோன்றுவித்து அசுரர்களை அழித்து மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு.

    பைரவர் வழிபாடு என்பது சிவாலயங்களில் ஒரு சிறப்பு அம்சம். எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவபெருமானின் மூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு. பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும் பிரதானமாகக் கூறப்படுவது 64 பைரவர்கள் ஆகும். ஒரு பைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர்.

    சனீஸ்வரனின் குருநாதர் பைரவர். சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனீஸ்வரன். பிறவியிலேயே முடமான சனீஸ்வரனை, அவரது அண்ணன் எம தர்மன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்டார் சனி பகவான். தனது வேதனையை தனது அன்னை சாயாதேவியிடம் தெரிவித்தார் சனிபகவான்.

    உடனே தேவி ‘மகனே! சஞ்சலப்படாதே! காலபைரவரை நோக்கி தவமிரு. அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்’ என்றாள்.

    அன்னை சொன்னபடியே சனி பகவான், காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய பைரவர், சனி பகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர் பட்டம் பெற்றதும் பைரவரால் தான்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். அப்படி அமைந்த அபூர்வ ஆலயங்களில் ஒன்று திருச்சியில் உள்ளது. ஆலயத்தின் பெயர் பைரவ நாத சுவாமி ஆலயம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அர்த்த மண்டப நுழைவு வாசலில் 6 அடி உயர துவார பாலகர்கள் இருக்க வடதிசையில் விசுவநாதர்- காமாட்சி அருள்புரிகின்றனர். கருவறையில் பைரவர் எங்கும் காணாத அமைப்பாக சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலயத்தின் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமையப்பட்டுள்ளது. இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர்.

    திருச்சுற்றில் அன்பு கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி. நந்திகேஸ்வரர், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தங்கள் தம்பதிகளுடன் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தின் விமானம் இரண்டு அடுக்குடன் அமைந்துள்ளது.

    கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் ‘பைரவ தீபம்’ என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது.

    பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). கருவறையின் முன் உள்ளது இந்த வாகனம். நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி அக வாழ்வு பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

    தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு ராசி மற்றும் நட்சத்திர பரிகார ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மகா தீப ஆராதனையும் நடைபெறும். தேனில் உப்பு போடாமல் செய்த உளுத்தம் வடை, பழங்கள், நெய், சித்ரா அன்னங்கள், கொப்பரைத் தேங்காய் நவதானியம், அஷ்ட திரவியம் முதலியவற்றை ஹோமத்தில் இடுவர். அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெறுவர்.

    அத்துடன் அன்று ருத்ரநாம, திரு சதி அர்ச்சனையும், வேதபாராயணமும், மூலமந்திர ஜபமும் நடைபெறும். அன்று பைரவர் வீதி உலா வருவதுண்டு.

    மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர்.

    கார்த்திகை மாதத்தில் வரும் ஜென்மாஷ்டமி, பைரவர் அவதாரம் எடுத்த நாள். அன்று ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும். அன்று சுவாமிக்கு 10,000 வடையினால் ஆராதனையுடன் அன்று திருவீதி உலாவும் நடைபெறும்.

    பங்குனி உத்திரம் ஆலய குடமுழுக்குத் திருநாள். அன்று பைரவருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும், மாலை தீபாராதனையும் நடைபெறுவதுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.

    இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீண்டு வரவும் இயலும் என்கின்றனர் பக்தர்கள்.

    தங்கள் பிரார்த்தனை பலிக்க பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை பழ மாலை சாற்றி, மிளகு, பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் மன மகிழ்ச்சி, பய நிவர்த்தி, காரிய வெற்றி, பணி இடையூறு நிவர்த்தி, கலை அபிவிருத்தி, கடன் தொல்லை நிவர்த்தி இவைகளை பெறலாம்.

    பிரதோஷ நாட்களில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, நந்திகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கு பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 4 மணி வரை திறந்திருக்கும். பிறகு மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    திருச்சி நகரத்தின் மையப்பகுதியான பெரிய கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.
    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.

    தல வரலாறு:

    ‘ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்குமிடத்தைக் கண்டறிந்து வரத் தகுதியுடையவர் அனுமனே’ என்று முடிவு செய்தார் ராமர். அவர் அனு மனிடம், சீதையைக் கண்டறிவதற்காக, அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து, ராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதைச் சீதைக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தன் கணையாழியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

    சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த, சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும் ராமன் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார். ராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்து கொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

    ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாகக் கருதப்படும் இடத்தில், வசிஷ்ட முனிவர், அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இக்கோவிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் இருக்கும் கருவறையில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில், ராமன், தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளைச் சொல்வதை இடதுபுறம் காதைச் சாய்த்துக் கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டுமென்பதற்காக, இங்கிருந்து சிறிது தள்ளியிருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார்.

    இக்கோவில் வளாகத்தில், கணபதி, ஐயப்பன், துர்க்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராமர், லட்சுமணன், அனுமன் என்று மூன்று பேருக்குமான கோவிலாக இந்த ஆலயம் இருந்த போதிலும், இது ‘அனுமன் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல், ஒட்டப்பம், கதலிப்பழம், வெல்ல அவல், பனப்பாயசம், சாத்துசாதம் போன்றவைகளைப் படைத்தும், அனுமனுக்குரியதாகக் கருதப்படும் பல்வேறு மலர்களைச் சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    இங்குள்ள ராமசாமி கோவிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதே போன்று பாகவதசேவை வழிபாடும் செய்யப்படுகிறது. லட்சுமணசுவாமி சன்னிதியில் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் கோவில் நிறுவப்பட்ட நாளில் தந்திரி தட்சினா, கேளி, சிறுமேளம் எனும் பெயர்களிலான சிறப்பு வழி பாடுகள் செய்யப்படுகின்றன.

    அனுமனுக்கு அவல் நைவேத்தியம்

    மலையாள நாட்காட்டியின்படி, துலாம் (ஐப்பசி) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் அனுமனுக்கான பெரும்விழா மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இதே போன்று, மீனம் (பங்குனி) மாதம் அஸ்தம் நட்சத்திர நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் அமாவாசை நாள் ஆகியவற்றிலும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அவல் வழிபாடு :

    சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக, ராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில், இக்கோவிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி, கால் பொதி (25 நாழி), அரைப்பொதி (50 நாழி), ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனுமனுக்கு அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    சீதையைக் கண்டறியச் சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாண்டிக் குதித்ததை நினைவூட்டும் வகையில் கோவில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்தக் கல் திடலைத் தாண்டிக் குதித்தால், அவர்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்கு, ராமன் சீதையைக் கண்டறிந்து வருவதற்காகச் சீதையின் உருவ அடையாளங்களையும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லிய போது, தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியினை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர், மலப்புரம் நகரில்இருந்து 32 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திரூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.
    விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.

    கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.

    தல வரலாறு :

    ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

    இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.

    பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜபெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

    ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.

    திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.



    மற்றொரு வரலாறு :

    இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது.. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப அமைதி குலைந்து, போர் சூழலும், அதர்மமும் தலை தூக்கியிருந்தது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் இருந்து அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதிக்கு வந்தவர், அதை ஒட்டிய நீர் வற்றியிருந்த கருட நதி (தென்பெண்ணையாறு) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதை, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனான திருமாலை வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் இத் தவத்தை அவர் மேற்கொண்டார்.

    பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் காட்சி அளித்தார். பின்னர் வேண்டும் வரம் கேட்கும்படி மகரிஷிக்கு அருளினார்.

    மகரிஷியோ, ‘இறைவா! தாங்கள் உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களை காண ஆசைப்படுகிறேன்’ என்றார்.

    அதற்கு இசைந்த திருமாலும், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என ஒவ்வொரு அவதார கோலத்தையும் வரிசையாக சடமர்ஷனுருக்கு காட்டினார்.

    ராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி, ‘ஐயனே! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் ராமனாகப்பிறந்து, எத்தனை துன்பங்களை அடைந்தீர். எத்தனை எத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தாங்கள் இவ்விடத்தில் இளைப்பாறுவதுடன், பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்’ என்றார்.

    அதன்படியே லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி ஸ்ரீதேவி வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை காட்டி அருளினார்.

    பின்னர் அடுத்தடுத்த அவதார காட்சியை மகரிஷிக்கு அருளினார். கிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சி யளித்தார்.

    அப்போது மகரிஷி, ‘பெருமாளே! இந்த மலை எதற்கு?’ என்றார்.

    ‘இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக’ என்றார் பெருமாள்.

    அதற்கு மகரிஷி, ‘இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் குழலோசையிலே பிரபஞ்சத்தை எல்லாம் மயக்கி பக்திபரவசத்தை ஊட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சி தர வேண்டும் ’ என்று வேண்டினார். பெருமாளும் அவ்விதமே ருக்மணி- சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனாக காட்சியளித்தார்.

    இப்படியாக பத்து அவதார திருக்கோலங்களையும் கண்டு மகிழ்ந்த மகரிஷியைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்திதானே?’ என பெருமாள் கேட்க, ‘கிடந்த (சயன) திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் அருள்பாலித்த தாங்கள், இத்தலத்திலேயே அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளித்து கலியுக காலத்தில் மக்கள் தங்களது திருக்காட்சியைக் கண்டு பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டும்’ என்றார், மகரிஷி.

    தனக்கென எதுவும் கேட்காமல், உலக மக்களுக்காக வேண்டியதால், அமர்ந்த கோலத்திலும் அவருக்கு காட்சி தந்தார் பெருமாள் என்கிறது மற்றொரு வரலாறு.

    இத்திருத்தலத்தில் மகா விஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள்.



    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு, சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கீழ்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு, கி.பி. 1884-ம் ஆண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது. ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது.

    பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி உள்ளது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து காத்து நிற்கிறார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப பெருமாள் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி இருக்கிறது.

    சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது.

    பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் துயில் கொண்ட (கிடந்த) கோலத்தில் சயனராமர் காட்சி தந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார். அவரது திருமார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.

    இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    சூரிய- சந்திரர் வழிபாடு :

    கிருஷ்ணராகவும், ராமனாகவும், பெருமாளாகவும் இத் தலத்தில் திருக்காட்சித் தரும் திருமாலை, பக்தர்கள் மட்டுமின்றி சூரியனும் சந்திரனும் வழிபடுவது மிகச்சிறப்பான நிகழ்வாகக் கூறலாம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்கள், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார்.

    அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும். இப்படி சூரியனும் சந்திரனும் ஒருசேர வழிபடும் திருத்தலங்கள் மிகச்சிலவே. அதிலும் வைணவ ஆலயங்களை காண்பது அரிது. அந்த குறையைப் போக்குகிறது இவ்வாலயம்.

    அமைவிடம் :

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் செல்ல குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
    வைத்தீஸ்வரன் கோவில் தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    “இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல
    நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
    இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்
    முதலானவையும் கூட அகலும் என்பர்.”

    தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது.

    சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

    பெயர்க் காரணம்:

    புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.

    கோயில் அமைப்பு:

    நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
    தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய்.

    எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

    தீர்த்தம்:


    கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

    சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர்.

    இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.

    மூர்த்திகள்:

    சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது.

    அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

    தலப்பெருமை:

    முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

    சடாயு குண்டம்:

    சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது.

    இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

    திருச்சாந்துருண்டை:

    இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர்.

    இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
    தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

    திருவிழாக்கள் :

    நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார்.

    மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திருமுன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் பேக்ஷத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு.

    ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம்.

    “காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
    காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
    புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
    பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”
    பொங்கம் = பொலிவு அல்லது மகிழ்ச்சி.

    வண்டிப் பயணமாகத் துவங்கி நடைப்பயணத்தையும் இன்று ஈர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் சிறப்புறு பயணமாகியுள்ளது. இது கீழச்சீவல்பட்டி, அழகாபுரி நகரத்தார்களோடு பள்ளத்தூர், குருவிக்கொண்டான்பட்டி, ஆத்தங்குடி, கோட்டையூர், சிறுகூடற்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த வண்டிப் பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள்.

    “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான். 
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு செல்லும் முன்பு சாலையோரம் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து செல்லும் போது இடதுபுறம் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசனம் செய்யலாம்.

    தல வரலாறு :

    முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக்கூடிய மூலிகையை தேடி அங்கு வந்துள்ளார். அப்போது அவர் மலைப் பகுதியில் மூலிகையை தேடி செல்லும் போது, அவருக்கு உதவ, தன்னை விட வயது மூத்தவரும், அதே பகுதியை சேர்ந்தவருமான ஒருவரை சீடனாக ஏற்றார். அவரது இயற்பெயர் கஞ்சமலை காலாங்கிநாதர்.

    மூலரும், காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் குடில் அமைத்து வசித்து வந்தனர். தினமும் காலையில் மூலிகையை தேடி சென்று விடுவார் மூலர். அவருக்கு தேவையான உணவை அவரது சீடரான காலாங்கி நாதர் சமைத்து வைப்பார். இந்த நிலையில் காலாங்கிநாதர் ஒரு நாள், உணவு சமைத்து கொண்டிருந்த போது, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். இதனால் உணவு பொங்கி வந்தது. உடனே அருகில் இருந்த கரண்டியை தேடினார். கரண்டி கிடக்காததால், பக்கத்தில் இருந்த ஒரு செடியை பிடிங்கி, அதன் வேர் பகுதியை பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கழுவி விட்டு, உணவை கிண்டி உள்ளார். சில நொடிகளில் அந்த உணவு கருப்பாக மாறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த வேரை, நெருப்பில் போட்டு விட்டார்.

    மேலும் கருப்பாக மாறிய உணவை தனது குருநாதருக்கு கொடுக்க முடியாது என்பதால், அதனை அவரே சாப்பிட்டு விட்டு, சமையல் செய்த பாத்திரத்தை கழுவி, அதில் புதிதாக உணவு சமைத்தார். இதனிடையே மூலிகையை தேடி சென்ற மூலர் வந்தார்.

    அப்போது அங்கிருந்த நபரை கண்ட அவர், ‘தாங்கள் யார்?’ என்று வினவினார். அதற்கு காலாங்கி நாதர், ‘நான் தான் உங்களது சீடன். என்னை அடையாளம் தெரியவில்லையா?’ என்றார்.

    உடனே அதற்கு மூலர், ‘நீ எப்படி இவ்வளவு இளமையாக மாறினாய்? நடந்ததை கூறு.’ என்றார்.

    இதையடுத்து நடந்த அனைத்தையும் கூறினார் காலாங்கிநாதர்.

    அதற்கு மூலர், ‘நான் தேடி வந்த மூலிகையே அதுதான். அது எங்கே?’ என்று கேட்டுள்ளார். மேலும் அதனை கழுவிய தண்ணீரை கேட்டார். அந்தத் தண்ணீரைக் குடித்ததன் மூலம் மூலரும் இளமையான தோற்றத்துக்கு மாறினார் என்கிறது வரலாறு.

    இளமை திரும்பிய மூலர், அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் வருவதாக கூறிய காலாங்கிநாதரிடம், ‘நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று கூறி விட்டு, சென்றார்.

    குருவின் ஆலோசனையை தட்டிக்கழிக்காத காலாங்கிநாதர், அங்கேயே இருக்க முடிவு செய்தார். ஆனால் வயதான தோற்றத்தில் இருந்த தான், இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து, ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார்.

    அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பிவிடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள்.



    இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது, ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார்.

    அப்போது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி, பொதுமக்களை அழைத்து வந்து, காலாங்கி நாதரை அடித்து உதைத்தனர்.

    வலி தாங்க முடியாமல் துடித்த அவர், அங்கிருந்து ஓடி, அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் ஒளிந்து கொண்டார். அதனை அகற்றிய ஊர்க்காரர்கள் பார்த்த போது, அங்கே காலாங்கி நாதர் தவக்கோலத்தில் காட்சி அளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அவரை வணங்கினார்கள். அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டனர். அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார்.

    அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரை தாக்கியதால், தண்டிக்கப்படுவோம் என்று அச்சத்தில் இருந்தனர். ஆனால் சித்தேசுவரசாமி யாரையும் தண்டிக்கவில்லை. மாறாக அவர் களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் என்கிறது இந்தத் திருத்தலத்தின் வரலாறு.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதனை சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    காந்த தீர்த்தக்குளம் :

    சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி விட்டு, சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    அமைவிடம் :

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது. மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதாவது இளம்பிள்ளை செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சித்தேசுவரர் கோவில் வழியாக தான் செல்கின்றன. 
    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.
    இலங்கை நாட்டில் முக்கியமான அம்மன் திருக்கோவில், மலையகத் தமிழர்களான இந்திய வம்சா வழியினரின் காவல் தெய்வம், இருபத்தியோரு நாள் விநாயகர் சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறும் கோவில், மாசியில் பிரம்மோற்சவம் காணும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோவில்.

    தல வரலாறு :

    கி.பி. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிழைப்பு தேடிய இந்தியத் தமிழர்கள், தலைமன்னார், அரிப்பு துறைமுகம் வழியே இலங்கை வந்தனர். காட்டுவழியில் பெரும் துன்பப்பட்டு, கால்நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மாத்தளையில் இருந்து சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மலையகத் தோட்டங்களுக்குச் சென்றனர். இவர்களின் கடினஉழைப்பே இன்றைய மலையகத்தின் செழிப்பாக காட்சி தருகின்றது.

    அவர்களது, தாய்நாடான இந்தியாவையும், வழிபடும் தெய்வங்களையும் பிரிந்து வந்த ஏக்கம் இவர்களை வாட்டியது. இந்நிலையில், இவர்களில் ஒரு அடியாரின் கனவில் அன்னை முத்துமாரி தோன்றினாள். ‘உங்களின் குறை தீர்க்க நான் ஊரில் உள்ள வில்வ மரத்தடியில் தோன்றியுள்ளேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். நான் உங்களை காவல் தெய்வமாகக் காத்தருள்வேன்’ என்று கூறி மறைந்தாள்.

    இதை அனைவரிடமும் கூறி மகிழ்ந்த அடியார், அன்னை அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்றனர். அங்கே சிறிய வடிவில் அன்னையின் சிலை வில்வ மரத்தடியில் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அன்னைக்கு சிறுகுடில் அமைத்து வழிபட்டு வந்தனர். இவளே முத்துமாரி அம்மனாகப் போற்றப்படுகின்றாள்.

    கி.பி. 1852-ம் ஆண்டு சுப்புப்பிள்ளை என்பவர் தன் பொருட்செலவில் இடம் வாங்கி அதனை கோவிலுக்கு தானமாகக் கொடுத்தார். இவருக்குப்பின் பல வணிகர்கள், செல்வந்தர்கள், நகரத்தார் போன்றோரின் ஒத்துழைப்போடு திருக்கோவில் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். கி.பி. 1960-ம் ஆண்டு புதிதாக கருவறை எழுப்பப்பட்டு, முதலாவது குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது.

    108 அடி ராஜகோபுரம் :


    இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்வது, விண்ணை முட்டி நிற்கும் 108 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம். சுதைச் சிற்பங்கள் நிறைந்த இந்த கோபுரம், நம் கண்களுக்கு விருந்தாகவும் வியப்பூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த ராஜகோபுரம் வடக்கு திசையில் இருந்து நம்மை வரவேற்கிறது. ஆலயத்திற்குள் உள்ளே விநாயகர், முருகப்பெருமான், சண்டேஸ்வரி, முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு, துர்க்கையம்மன், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன.

    ஆலயத்தின் நடுநாயகமாக அன்னை மாத்தளை முத்துமாரியம்மன் கிழக்கு முகமாக எளிய வடிவில் ஒளி வீசும் வடிவங்கொண்டு அருளாசி வழங்குகின்றாள். இந்திய வம்சாவளி தமிழர்களின் காவல் தெய்வம் இவளே என்று எண்ணும் போது நம் மெய்சிலிர்க்கிறது.

    மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை என்ற அமைப்பினால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



    இவ்வாலயம் ஆன்மிகப் பணியோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்தப் பகுதிவாழ் மக்களின் சமூக முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வருகிறது. சமயம் சார்ந்த அறப்பணிகள், இயல், இசை, நாடகம், நூல்கள் வெளியீடு இவற்றோடு நூலகம், ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்புகள், பள்ளிக்கூடம், தமிழ்தட்டச்சுப் பயிற்சி, தையல்வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என அனைத்தையும் இலவசமாகக் கற்றுத் தருகிறது.

    இவ்வாலயம் 1983-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கலைநயம் மிக்க ஐந்து தேர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. என்றாலும், அனைவரும் பெரும் முயற்சியின் காரணமாக, ஐந்து சித்திரத் தேர்கள் 1993-ல் மீண்டும் உருவாகி தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    அலுவிஹாரை :

    மாத்தளை நகரின் வடக்கில் பேதிஸ்த மன்னனால் எழுப்பப்பட்ட ‘அலுவிஹாரை’ பதிமூன்று குகைகளைக் கொண்டதாகும். இதன் பெருமையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இங்குதான் திரிபீடகம் என்ற ஓலைச்சுவடி நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில், வலகம்பாகு மன்னன் காலத்தில் எழுதப்பட்டது.

    கொடுங்கோல் மன்னன் ராஜசிங்கன் காலத்தில் பவுத்த குருமார்கள் இந்த அலுவிஹாரையில் தஞ்சமடைந்தனர். அதோடு பவுத்த நூல்களைப் பாதுகாக்கும் இடமாகவும் இது விளங்கியிருக்கிறது. ஐரோப்பியர் ஆட்சியில் இக்குகை சேதப்படுத்தப்பட்டது. என்றாலும், கண்டிமன்னன் விஜயராஜ சிங்கன் காலத்தில் (கி.பி.1739-1747) புனரமைக்கப்பட்டது. இலங்கை அரசு இக்குகையினைப் புனித பிரதேசமாக அறிவித்துள்ளது. பதிமூன்று குகைகளில் சிலவற்றை மட்டுமே தற்போது காணமுடியும்.

    பெயர்க்காரணம் :


    மாத்தளை திருத்தலமானது, இலங்கை நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகவும், புராதனமான நகரமாகவும், முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் விளங்குகின்றது. கஜபாகு மன்னன் காலத்தில் சோழநாட்டில் சிறைபிடிக்கப்பட்ட பெருங்கூட்டம், மாத்தளை பகுதியில் தான் குடியமர்த்தப்பட்டனர். பெருங்கூட்டத்திற்கு சிங்களத்தில், ‘மஹாதலயக்’ என்று பெயர். இதுவே மருவி, ‘மாத்தளை’யானதாகக் கூறுவர்.

    அமைவிடம் :

    இலங்கையின் மத்திய மாகாணத்தின், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 154 கி.மீ., கண்டியில் இருந்து வடக்கே 24 கி.மீ., தொலைவில் மாத்தளை நகரம் உள்ளது. இக்கோவிலின் பின்னணியில் அழகிய மலையும், அதன் மீது முருகன் கோவிலும் இருக்கின்றன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 
    ×