search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விரைவில் புதுச்சேரி கவர்னர் மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்- நாராயணசாமி
    X

    விரைவில் புதுச்சேரி கவர்னர் மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்- நாராயணசாமி

    • மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
    • புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

    புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

    முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

    இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×