என் மலர்
மற்றவை
- என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான்.
- குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
நம் அன்றாடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான் காரணம்..
இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச்சிறந்தது..
குருவிடம் வந்தான் ஒருவன்.
''குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ தேடிக் கிட்டே இருக்கு'' என்றான் வந்தவன்.
''அப்படியா?''
''ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.''
குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
''இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்'' என்றார்.
குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
''குருவே, அவன் நிம்மதியே போச்சு.''
''அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...''
''அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.
ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.
வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறான்.''
''இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?'' என்றார் குரு.
ஆம்.,நண்பர்களே..,
இருப்பதை வைத்து திருப்திக் கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.
ஆம்., 'கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்"
-ஸ்ரீவளர் ராஜென்
- ஒருமுறை கவியரசர் கண்ணதாசனின் கையில் அகப்பட்டது.
- எம்.எஸ்.வி.யால் பலகாலம் கவியரசரின் மனதுக்குள் ஓய்வாக ஒருபக்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.
இராமச்சந்திரக் கவிராயர் என்று ஒருவர்.
பாவம். அந்த பாவலர், விரக்தியின் விளிம்புக்கே சென்று வந்தவர் போலிருக்கிறது.
தனது வேதனையின் வெளிப்பாடாக இராமச்சந்திரக் கவிராயர் ஒரு பாடல் புனைந்தார். வேதாந்தம் கலந்த பாடல் அது.
'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லைத்தான் ஆரைத்தான் நோவத்தான்' என அந்தப்பாடலில் வேதனையை வெளிப்படுத்தியிருப்பார் கவிராயர்.
துன்பம் கொஞ்சம் தூக்கலாக உள்ள இராமச்சந்திரக் கவிராயரின் இந்த பாடல் அச்சிடப்பட்ட காகிதம் ஒன்று, ஒருமுறை கவியரசர் கண்ணதாசனின் கையில் அகப்பட்டது.
சோகம் எப்போதும் சுவையானது அல்லவா? கவியரசர் அந்த பாடலை வாசித்தபோது அந்தப் பாடல் அவருக்குள் ஏற்படுத்தியது சோகத்தை அல்ல, வேறொரு சுகமான உணர்வை!
'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்'என்ற வரிகள் கவியரசருக்குள் ஏனோ 'அத்தான், அத்தான்' என்று யாரோ அழைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தின.
அதை அப்படியே திரைப்பாடலாக மாற்றி, 'அத்தான், என்னத்தான், அவர் என்னைத்தான்' என்று எழுதினார் கண்ணதாசன். ஆனால், அந்தப் பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அப்போது ஏற்கவில்லை.
'என்னண்ணே, அத்தான் பொத்தான்னு எழுதிக்கிட்டு? வேற எதையாவது நல்லதா(!) எழுதுங்க' என்று அப்போது கேட் போட்டு விட்டார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
பல்லக்கில் ஏறி பவனி வந்திருக்கவேண்டிய அந்தப்பாடல், பாவம், எம்.எஸ்.வி.யால் பலகாலம் கவியரசரின் மனதுக்குள் ஓய்வாக ஒருபக்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.
இந்தநிலையில், பாவமன்னிப்பு (1961) படத்துக்காக அந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் மீண்டும் அரங்கேற்ற முயல, அப்போதும் அதற்கு முட்டுக்கட்டை போட முயன்றிருக்கிறார் எம்.எஸ்.வி.
பாவம். இந்தமுறை எம்.எஸ்.வி.யின் பாச்சா பலிக்கவில்லை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த 'அத்தான், என்னத்தான்' என்ற பாடல், இன்றுவரை திரை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்து வீற்றிருக்கிறது.
-மோகன ரூபன்
- வனத்துறைச் சட்டப்படி இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது.
- நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான்.
"ஜவ்வாது எப்படி தயாரிக்கப்படுகிறது?" குறிப்பிட்ட பூனை விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இந்த "பிசினை" தூய சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். மிக பெரிய ஆகர்ஷன சக்தி கொண்ட பொருளாக மாறும். இதுதான் தூய ஜவ்வாது.
வனத்துறைச் சட்டப்படி இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கஞ்சமலை போன்ற காடுகளில் இந்த இன பூனைகள் இருக்கிறது. அங்குள்ள குரவர்கள் மூலம் தூய ஜவ்வாது இன்றும் கிடைக்கிறது.
- சிவசங்கர்
- இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.
- எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்!
எளிமையின் திருஉருவம் கக்கனைப் பற்றி "யோசிக்கும் வேளையில் " நூலில் ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்..
"…நானும் அவரும் ஒரு சமயம் ஒரே ரெயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது.
இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.
நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன்!
எலெக்ட்ரிக் ஷேவரில் தான் சவரம். ஒடிகொலன் கலந்த 'after shave lotion', ஸ்னோ, பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்து சிரித்தார் திரு.கக்கன்.
``இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா?… நம்ம வழக்கம் இவ்வளவுதாங்க'' என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார்..
குறுக்கில் பாதியாக உடைத்தார்.
ஒரு பாதியில் மழமழவென்று முகச்சவரம் செய்து கொண்டார்.
ஒரு கீறல்,
ஒரு வெட்டு,
சிறு ரத்தக் கசிவு ஒன்றுமில்லாத லாவகத்தை ரசித்தேன்.
அவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. சிந்தையில் அவர் முகம் தெரிகிறது.
கக்கன் சொன்னார்:
``இது ஜெயிலில் இருந்த காலத்துப் பழக்கம்; மந்திரியானா மாறிடுமா?….
ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க. அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன்.
முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம்.
சிக்கனமாக இருக்கிறதுதாங்க நல்லது!''
நான் காந்திஜியை நினைத்துக் கொண்டேன்.
தமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர் கக்கன்.
அத்துடன், அரசியலில் தாம் பெறுகிற வெற்றி என்பது, தொண்டு செய்ய மக்கள் தமக்கு வழங்கிய கருவி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால், எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
எவராலும் பின்பற்ற முடியாத நெறிமுறைகளைப் பின்பற்றினார்.
நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ?
ஆரவாரம் இல்லை,
அலட்டல் எதுவுமில்லை;
எளிமையே அவரிடம் சிரித்தது…
'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்! '
-மா. பாரதி முத்துநாயகம்
- வெற்றி பெற வேண்டுமா- கடினமாக கவனமாக உழைக்க வேண்டும்.
- வெறும் வயிற்றில் வெந்தயம், வெள்ளைப்பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் எடை குறையும் என்றால் அது மேஜிக்.
பலருக்கு லாஜிக்காகப் பேசுவது பிடிக்காது. மேஜிக்தான் பிடிக்கும். ஏனென்றால் லாஜிக் உண்மையைச் சொல்கிறது. பின்பற்றக் கடினமானது. மேஜிக் எளிமையானது. நோகாமல் நொங்கு தின்பது.
லாஜிக்கலாகப் பார்த்தால் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.மேஜிக்கலாக யோசித்தால் பொறுப்பை இன்னொருவர் மீது போடலாம்.
1. வெற்றி பெற வேண்டுமா- கடினமாக கவனமாக உழைக்க வேண்டும். - இது லாஜிக். ஆனால் எதாவது குறுக்குவழியில் ஒரு கடவுளோ, சடங்கோ, வழிபாடோ, அல்லது ஆழ்மன ஆற்றல், பிரபஞ்ச அலை போன்ற போலி அறிவியல் விஷயங்கள் மூலம் வெற்றி பெற நினைப்பது மேஜிக்.
2. பணக்காரன் ஆகவேண்டுமா ? செலவுகளைக் குறைத்து நீண்ட காலம் பொறுமையாக முதலீடு செய்ய வேண்டும். இதுதான் லாஜிக். மல்டி லெவல் மார்க்கெட்டிங், 36%, 72% வளர்ச்சி தருவதாக விளம்பரப்படுத்தும் திட்டங்கள், சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மேஜிக்.
3. உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? முறையான டயட் , எக்ஸர்ஸைஸ் விடாமல் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது லாஜிக். வெறும் வயிற்றில் வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெண்டைக்காய் இவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் எடை குறையும் என்றால் அது மேஜிக்.
4. இந்த மருந்து 50% குணப்படுத்தும். இதில் இன்னின்ன பக்க விளைவுகள் இருக்கின்றன என்பது லாஜிக். இது 100% குணப்படுத்தக்கூடியது. 0% பக்கவிளைவுகள் என்பதெல்லாம் மேஜிக்.
5. தேர்வில் வெற்றி அடையக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். இது லாஜிக். வினாத்தாள் கிடைக்குமா எனப் பார்ப்பது மேஜிக்.
6. நம் மனதின் சிக்கல்களுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் . இது லாஜிக். நாம் முயற்சிக்கவே செய்யாமல் ஹிப்னாடிசம் அல்லது ஒரு மாயாஜால மாத்திரை மூலம் வேறு யாரோ நம்மைக் குணப்படுத்த வேண்டும் என நினைப்பது மேஜிக். மற்ற மருத்துவ சிகிச்சைகளிலும் அப்படித்தான்.
-டாக்டர் ஜி ராமானுஜம்
- சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின் அது கஜகேசரி யோகமாகும்.
- ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.
கஜ கேசரி யோகம் என்றால் என்ன?
கஜம்=யானை
கேசரி=சிங்கம்
மதம் கொண்ட யானையை யாராலும் அடக்கமுடியாது, ஆனால் ஒரு சிங்கத்தை கண்டால் மதம் கொண்ட யானையும் அடங்கிவிடும்.
அதுபோல் ஒருவரது ஜாதக கட்டத்தில்,எவ்வளவு துன்பம் தரக்கூடிய கிரகஅமைப்புகள் இருந்தாலும், அந்த ஜாதகர்க்கு கஜகேசரியோகம் மட்டும் இருந்து விட்டால், மதம் கொண்டயானை எப்படி சிங்கத்திடம் அடங்கிவிடுகிறதோ அதுப்போல் எவ்வளவு துன்பம் தரக்கூடிய கிரக அமைப்பு இருந்தாலும், இந்த யோகம் இருந்தால் எல்லா துன்பங்களும் அடங்கிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
ஒரு ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7, 10 இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு நிற்க, குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றால், நின்ற அந்த 1,4,7,10 இடங்கள் சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின் அது கஜகேசரி யோகமாகும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.
பொதுவாக இந்த யோகம் ஜோதிடத்தில் மிக உயர்ந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்த கஜகேசரி யோகமுள்ள ஒரு ஜாதகர் ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட தரித்திர சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை மீட்டு கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகத்தில் பிறந்த அந்த ஜாதகருக்கு நிச்சயமிருக்கும்.
-ஜோதிடர் சுப்பிரமணியன்.
- அசைந்து கொடுக்காமல் வலியும் வேதனையும் இருந்து கொண்டே இருக்கும்.
- இறுதியில் ஆபரேஷன் செய்வதுதான் நிரந்தர தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
கால்சியம் மற்றும் கிரியேட்டின் அதிகமாவதால் சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு, இதனால் பல உபாதைகளுக்கு ஆளாகி என்ன செய்வது என்று தெரியாமல்.. யார்யாரெல்லாம் என்னென்ன மருந்துகளையெல்லாம் சொல்கிறார்களோ அதனை எல்லாம் முயற்சித்து பார்த்து இருப்பீர்கள்.. சிலர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கல்லை கரைக்க மருந்து உட்கொண்டு வருவீர்கள்..ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் வலியும் வேதனையும் இருந்து கொண்டே இருக்கும். இறுதியில் ஆபரேஷன் செய்வதுதான் நிரந்தர தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள்...
சரி..ஆபரேஷன் செய்தாச்சு..கல் மீண்டும் உருவாகாமல் இருக்குமா..என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாது..காரணம் மீண்டும் கல் உருவாகும்...இது ஓர் தொடர் கதை மாதிரி சென்று கொண்டே இருக்கும்..இதற்கு ஒரு முடிவு இல்லையா..என ஏங்கி நிற்கும் ஏழைகளும் நடுத்தர வாதிகளும் தான் அதிகம்...
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் வெண்டைக்காய்,தக்காளி,பசலைக்கீரை,போன்ற கால்சியம் அதிகம் உள்ள பொருட்களை குறைவாக சாப்பிட வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்... ஆபரேஷன் செய்து இருந்தாலும் சரி...செய்யவில்லை என்றாலும் சரி..சிறுநீரகத்தில் உள்ள கல்லை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற மிக எளிமையான தேனீர். இதனை காலை மாலை இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால் போதும்.. கல்லும் கரையும்..அதன் மூலம் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்..
மூக்கிரட்டை இலை 25 கிராம்
சிறுபீளை இலை 25 கிராம்
நெருஞ்சில் 25 கிராம்
இலவங்கப்பட்டை பொடி 2 கிராம்
அனைத்தையும் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து தண்ணீர் 100 மில்லி ஆனதும் வடிக்கட்டி காலை இரவு சாப்பாட்டிற்கு பிறகு தினமும் குடித்து வரவும்..எப்படிப்பட்ட கல்லாக இருந்தாலும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
-செந்தில் குமார்
- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.
வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.
இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.
இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது.
- ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.
சீன பெருஞ்சுவர் தெரியும், இந்திய பெருஞ்சுவர் தெரியுமா?
ராஜஸ்தானில் 15ம் நூற்றாண்டில் ராணா கும்பாவால் உதய்பூர் அருகே கட்டபட்டது தான் கும்பல்கர் எனும் இந்த கோட்டைப் பெருஞ்சுவர். சுமார் 33 கிமி நீளமான சுவர் என்பதால் உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது. யுனெஸ்கோ பாதுகாக்கபட்ட கலாசார குறீடாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த கோட்டையில் பிறந்தவர் தான் மகாராணா பிரதாப் சிங். அதனால் ராஜஸ்தான் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது இந்த கோட்டை. இதன் அகலம் 15 மீட்டர். எட்டு குதிரைகள் அருகருகே நடக்கமுடியும்.
கிபி 1535ல் சித்தூர் முற்றுகையிடபட்டபோது,. அதன் இளவரசன் உதய் இங்கே தான் கொண்டுவரபட்டார். சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.
ஆனால் கிபி 1578ம் ஆண்டு, கோட்டைக்கு நீர் வரும் பகுதி அக்பரின் தளபதி ஷபாச்கானால் கண்டுபிடிக்கபட்டு, நீர் வரத்து அடைக்கபட்டு கோட்டை வீழ்ந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே ராணா பிரதாப் சிங் இதை மீண்டும் மீட்டுவிட்டார். அதன்பின் பெரியதாக இங்கே போர்கள் நடைபெறவில்லை. இந்த கோட்டையை பிடிக்க முடியாது என கருதியே விட்டு இருக்கலாம்.
ப்ரிட்டிஷார் ஆட்சியில் 1818ல் சில சாதுக்கள் கோட்டையை பிடித்து புரட்சி செய்தார்கள். ஆனால் ப்ரிட்டிஷார் பேசி அவர்களை சரணடைய செய்துவிட்டார்கள்.
- நியாண்டர் செல்வன்
- ஆணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை நியாயமான பணம்பொருள் வரும் வழிகளை உருவாக்குதல்.
- ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வது.
திருமணம் செய்து கொள்ள மணமக்களுக்கு ஜோதிடம் பத்து பொருத்தங்களை கூறுகிறது. ஆனால் திருமணம் மற்றும் காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்களை சங்ககாலம் இப்படி வறையறை செய்துள்ளது..
1. குலம்: இரண்டுபேரும் ஒரே நல்ல குலத்தில் பிறந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைவன் உயர்ந்த குலத்தவனாக இருக்கலாம் அப்போது தடையில்லை.
2.நற்பண்பு: நல்ல குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது. நற்குடிக்குரிய பண்புகளை ஆண், பெண் இருவரும் பெற்றிருக்கப் வேண்டும்.
3. ஆண்மை: இது இன்று நாம் சொல்லும்படி பெண்ணை உடலளவில் சமாளிப்பது மட்டுமே ஆணுக்கு உரிய பண்பாக மட்டும் அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. பெண்ணுக்கும் அன்று ஆண்மை வேண்டி இருந்தது.
ஆள் + மை = ஆண்மை, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டப்படும் ஆளுமைத்திறன்.
ஆணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை நியாயமான பணம்பொருள் வரும் வழிகளை உருவாக்குதல். அவ்வழிகளில் தவறாமல் இருந்து பணம் பொருட்களைச் சேர்த்தல்.
பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை அப்படிச் சேர்த்த பொருளைச் சேமித்தல். அதனை தேவைக்கேற்ப முறையான வழியில் செலவிடுதல்.
4. வயது: பழந்தமிழ் மரபில் ஆணிற்கு 18 வயதும் பெண்ணிற்கு 16 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனை இந்த காலத்தில் 23/21 அல்லது 25/21 அல்லது26/23 அல்லது 28/25என்று அவர்கள் வசதிக்கு வச்சுக்குங்க.
5. உருவம்: இது ஒருவர் மற்றவரை விரும்பும்படி அமைந்த தோற்றப்பொருத்தம்.
6. மனப் பொருத்தம்: இருவரிடத்தும் உள்ள மனவோட்டங்கள் ஒத்திருப்பது. ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வது. அதாவது ஒத்துப் போகும் குணங்கள்.
7. நிறை : தமக்கிடையில் நடப்பனவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்.
8. அருள்: ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெரிது படுத்தாது, நிறைவுகளை நினைவில் கொண்டு செலுத்தும் அன்பு.
9. உணர்வு : மொழியால் வெளிப்படுத்தப்படாத போதும் ஒருவரின் உள்ளக் குறிப்பினை இன்னொருவர் அறியும் தன்மை.
10.திரு: இருவரையும் ஒருமித்துக் காண்பவர்கள் மனதில் தோற்றப்பொருத்தம் நடத்தைகள் பற்றி குறித்து ஏற்படும் மதிப்பு.
இன்றைக்குப் பொருந்தாத சில பண்புகளை விட்டுப் பார்த்தால், இன்று இவை காதலன் காதலிக்கு மட்டுமல்ல இப்பொருத்தங்கள் கணவன் மனைவிக்கு இடையேயும் தேவைப்படுகின்றன. இதன்படி இல்வாழ்வில் இணைந்தவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம வீசும் என்பதில் ஐயமிலலை.
-கோபிகா வாசன்
- தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
- முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதன் முதலில் மும்மொழிப் பாட சாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
தமிழ்நாட்டில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.
தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் இராமலிங்க அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையையும் கட்டியவர் இராமலிங்க அடிகளே.
-அண்ணாமலை சுகுமாறன்
- ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா? வேறொன்றுமில்லை.
- எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.
தொலைபேசியை எடுத்து பேசுவதற்கு முன் "ஹலோ" என்று சொல்லுகிறோமே, அந்த ஹலோவுக்கு என்ன பொருள் தெரியுமா?
வேறொன்றுமில்லை.. தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம் பெல்லின் காதலி பெயர் "மார்கரெட் ஹலோ".
கிரகாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசியில் முதன்முதலில் பேசியபோது தன் காதலியின் பெயரை (ஹலோ) சொல்லி அழைத்தார். அதுமுதல் எல்லாரும் போனில் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்று ஆனது.
-சுந்தரம்






