என் மலர்tooltip icon

    வட கொரியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
    • தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    பியாங்யாங்:

    கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் தேதி அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தும் ஒப்பந்தத்தில் தென்கொரியா கையெழுத்திட்டது. இது தென்கொரியாவின் மீது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் இது குறித்து கூறும்போது, `தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார்.
    • அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்கிறது.

    தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி நடத்துவதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஏவுகணை சோதனையை நடத்துகிறது.

    இந்த நிலையில் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ உள்ளது. இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும் திட்டமிட்டபடி அதை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை பெறுவது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

    மேலும் உளவு தகவல்களை சேகரிக்கும் திறனை உறுதியாக நிலைநிறுத்த வடகொரியா பல செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும்.

    அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன. விமானம் தாங்கி கப்பல்கள், அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்கள் போன்றவற்றை நிலைநிறுத்துவதன் மூலம் தென்கொரியாவை ஆக்கிரமிப்புக்கான மேம்பட்ட தளமாக அமெரிக்கா மாற்றியுள்ளது என்றார்.

    சமீபத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு போர் பயிற்சியை தொடங்கிய நிலையில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை ஏவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    • வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.

    டோக்கியோ:

    வடகொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயத சோதனை போன்றவற்றை நடத்தி தனது நாட்டின் ஆயுத பலத்தை காட்டி வருகிறார்.

    குறிப்பாக அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளும் விதித்துள்ளது. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட அதிபர் கிம் ஜாங் உன் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை.

    தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எதிர்ப்பில் உள்ள வடகொரியா அந்த நாடுகளை சீண்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி நடத்தின. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியா தனது ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது.

    குறிப்பாக அமெரிக்கா-தென்கொரியாவின் ராணுவ பயிற்சி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆப்டிவ் என்ற செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) சோதனை செய்துள்ளது. இந்த சோதனை போட்டியாளர்களுக்கு தீவிரமான அமைதியின்மை மற்றும் திகிலை ஏற்படுத்தும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையை அதிபர் கிங் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையின் மூலம் ராணுவ திறன், மூலோ பாய தாக்குதல் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த தீவில் வசிக்கும் லட்சகணக்கான மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கையை ஜப்பான் திரும்ப பெற்றது.

    • ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.
    • தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம்.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.

    எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அண்மையில் நடத்தின. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை முடுக்கியது.

    இந்தநிலையில் ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. இதற்கு தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது.
    • வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்துகிறது.

    இந்த நிலையில் தற்போது வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. இதன் மூலம் செயற்கையாக கடலில் சுனாமியை ஏற்படுத்தி எதிரிகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் டிரோன் மூலம் அணு ஆயுத சோதனையை இன்று மீண்டும் வடகொரியா நடத்தி உள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

    ஹயில்-2 என்ற பெயரிலான இந்த அணு ஆயுத சோதனை கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கிழக்கு துறைமுக நகரான டன்கான் பகுதியில் இந்த சோதனை நடத்தப் பட்டது. இந்த வாரத்தில் நடந்த 2-வது சோதனை இதுவாகும். இப்படி தொடர்ந்து வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென் கொரியா வெளியிட்டுள்ளது.
    • உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

    வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

    அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

    • ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின.
    • ஹைசன் நகரில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப தொடங்கினர்.

    அப்போது ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே மாயமான துப்பாக்கி குண்டுகளை தேடினர். ஆனால் பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதை தொடர்ந்து அவர்கள் இந்த விஷயத்தை தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த விவகாரம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக அவர், துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தார்.

    மேலும் இது தொடர்பான விசாரணைக்கு தீவிரமாக ஒத்துழைக்குமாறு அங்குள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூகக் குழுக்கள் மற்றும் சுற்றுப்புற கண்காணிப்பு பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து, ஹைசன் நகரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 2 குறுகிய அளவிலான பாலிஸ்டிக் சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக எல்லைப்பிரச்சினை தொடர்பாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது.

    இருநாட்டு படைகளும் ஒன்றாக இணைந்து மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 11 முறை சோதனை நடத்தி உள்ளது.இந்த வாரம் மட்டும் 7- வது தடவையாக ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது.சில நாட்களுக்கு முன்பு நீருக்கடியில் அணு ஆயுத சோதனை மூலம் செயற்கையான சுனாமியை உருவாக்கி மற்ற நாடுகளை அச்சுறுத்தியது.

    இந்த நிலையில் இன்று காலை வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 2 குறுகிய அளவிலான பாலிஸ்டிக் சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது. கிழக்கு கடற்கரையை நோக்கி ஜூங்குவா மாகாண பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது தனது இலக்கை ஏவுகணைகள் தாக்கியதாக தெரிய வருகிறது. ஒருபுறம் வடகொரியா இதுவரை இல்லாத வகையில் ஏவுகணை சோதனை நடத்தி வருவதும், மறுபுறம் தென் கொரியா-அமெரிக்கா கூட்டுப்படையினர் மிகப் பெரிய அளவிலான பயிற்சியினை நடத்துவதாலும் கொரியா தீபகற்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சியோல்:

    அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

    இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

    கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணு ஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டுப்போர் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், போரைத் தடுக்கவும் எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல்களை நடத்தத் தயாராக ராணுவம் இருக்க வேண்டும்" என கூறினார்.

    இதனிடையே அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 12-ந் தேதி நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்கள் தாங்கிய 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.
    • ஒரு வாரத்தில் மட்டும் வடகொரியா தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

    சியோல்:

    கொரியா தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த 2 நாடுகளுக்கும் பரம எதிரியாக திகழ்ந்து வரும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த 12-ந் தேதி நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்கள் தாங்கிய 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இதன் தொடர்ச்சியாக 14-ந்தேதி (செவ்வாய்கிழமை) 2 குறுகிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இதையடுத்து இன்று காலை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏவப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தென்கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒரு வாரத்தில் மட்டும் வடகொரியா தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஒரு புறம் வடகொரியா ஏவுகணை சோதனை மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா படை நடத்தி வரும் கூட்டு பயிற்சிகள் அங்கு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×