என் மலர்
உலகம்

இஸ்ரேலில் மோடி செய்தது என்ன?.. எப்ஸ்டீன் கோப்புகளில் அனில் அம்பானி, மத்திய அமைச்சர் பெயர்கள் அடிபடுவது ஏன்?
- அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
- உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.
பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?
அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.






