என் மலர்
உலகம்

உங்களின் வலிமையான ராணுவத்தை அழிப்போம்..!- டிரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
- அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த ஈரான் அங்கு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. பயிற்சிகளின் போது நீர்வழியில் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெக்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அயதுல்லா அலி கமெனி பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம்.
அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக ஒரு போர்க்கப்பல் ஒரு ஆபத்தான ராணுவ இருப்பு ஆகும். ஆனால் அந்த போர்க்கப்பலை விட ஆபத் தானது ஒன்று உள்ளது.
அது போர்க்கப்பலுக்கு கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக் கூடிய ஆயுதம் ஆகும். ஈரான் அரசாங்கத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்று அதில் தோற்றது. அதை நீங்களும் (டிரம்ப்) செய்ய முடியாது என்றார்.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்ப் நிர்ணயித்த முக்கிய நிபந்தனைகளுக்கு ஈரான் இன்னும் உடன்படவில்லை.
டிரம்ப் கூறியது போல் இதை ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
பேச்சுவார்த்தைகளை எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை டிரம்ப் இறுதியில் முடிவு செய்வார் என்றார்.






