என் மலர்tooltip icon

    இலங்கை

    • இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலை நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதையடுத்து மார்ச் 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடியால் உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்கான நிதி வழங்குவதை அரசு உறுதி செய்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையக்குழுவின் இயக்குனர் சமன்ஸ்ரீ ரத்நாயக்கா தெரிவித்தார்.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கின. சமீபத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவியை அறிவித்தது.

    இதற்கிடையே இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசிடம் இல்லை என்று அதிபர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு அரசுடைமையாக்கப்பட்டது.

    கொழும்பு:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 12 பேரில் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு அரசுடைமையாக்கப்பட்டது.

    • சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
    • முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.

    அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்தன.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து அறிவித்து உள்ளது.

    முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை பல தவணைகளாக கடன் அளிக்கப்படும்.

    இதுதொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை எதிர் நோக்கி நாங்கள் இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    சர்வதேச நாணய நிதியம் கூறும்போது, "நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர இந்த நிதி உதவும்" என்று கூறியுள்ளது.

    • இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்.
    • இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்றார்.

    கொழும்பு:

    இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை.

    தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என தெரிவித்தார்.

    • ஒப்பந்தம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கையெழுத்தானது.
    • கூடுதல் நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொழும்பு :

    இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டித்தரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை முன்னெடுத்தது. அந்தவகையில் ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.

    இதற்கிடையில் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது ஒரு வீட்டை கட்டுவதற்கு தலா ரூ.28 லட்சம் தேவை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் திட்டத்துக்கான கூடுதல் நிதியுடன் கூடிய உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி கோபால் பாக்லே முன்னிலையில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தை இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கூறியதாவது:-

    நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக கூடுதல் நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் தீர்மானிப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகி இருக்கிறது.

    2020-ம் ஆண்டில் நான் ராஜாங்க மந்திரியாக பதவியேற்கும்போது இந்தியாவின் 4 ஆயிரம் வீட்டு திட்டம் அமலுக்கு வந்தது. இதில் 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டியுள்ளது. இதனை உடனடியாக முடித்து பயனாளிகளிடம் வீட்டை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் கொரோனா பேரிடர், அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரூ.3 ஆயிரம் வரை சிமெண்ட் விலை அதிகரித்தது. அன்று ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் ரூ.28 லட்சம் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டமும் வெகுவிரைவில் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
    • போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் விரட்டினர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனவே தாக்குதலை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரிகளிடம் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்களும் சில மாணவர்களும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியது.

    போலீசாரின் தாக்குதலுக்கு மாணவர் அமைப்பு மற்றும் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கடும் எதிர்பை தெரிவித்து உள்ளனர்.
    • கடந்த 15 ஆண்டுகளாக இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் எங்கள் போராட்டத்துக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது.

    அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் வெளியுறவுதுறை மந்திரி அலி சப்ரி பேசும் போது, நீண்ட காலமாக நீடித்து வரும் மீன்பிடி மோதலுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக தங்கள் கடற்பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு லைசென்சு வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கருடன் விவாதிக்கப்பட்டது.

    மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாட்டின் கடல் வளம் பற்றியும் நீண்ட கால தீர்வை காண்பது இலங்கையின் முன்னுரிமை ஆகும். இதனால் இந்தியா இந்த உரிம முறையை ஒரு தீர்வாக முன் வைத்து உள்ளது. இது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். இதன் மூலம் இலங்கை மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பயன் படுத்தக்கூடிய பணத்தையும் கொண்டு வரும். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இந்திய படகுகள் எங்கள் கடலுக்கு வருகின்றன. இதனை எங்கள் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கடும் எதிர்பை தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மீனவர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னலிங்கம் அன்னராஜா கூறும் போது, இலங்கையின் வடபகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் மீன் பிடித்து வருகிறோம். ஏற்கனவே இந்த பகுதியில் இந்திய மீன் பிடி படகுகளால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    பெரும் இழப்புகளையும் சந்தித்து வருகிறோம். அரசின் இந்த முடிவால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் எங்கள் போராட்டத்துக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும்.

    ஒரு சிலர் இந்த பிரசனையை பயன்படுத்தி இரு நாட்டு மீனவர்களையும் ஒருவருக்கொருவர் எதிராக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த பிரசனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
    • வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

    அதன் பிறகு அவர் பொருளாதார சரிவில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்கள் மீது புதிய வரியை விதித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து கொண்டிருக்கும் போது புதிய வரிகளை விதிப்பதா? என கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரிவிதிப்புக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கோரி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

    இந்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், டாக்டர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி இன்று (1-ந்தேதி) தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    அவர்கள் வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

    • போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர்.
    • எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

    தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உணவு பொருள், எரிபொருள், சமையல் கியாஸ், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில்விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு கடனில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நிதிபெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.எனினும் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவிவருவதால் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.

    எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரகணக்கான தொண்டர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

    எனினும் போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர். அப்போது எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இனி தேர்தல் நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தேர்தல் ஆணையம் கேட்க உள்ளது.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பேசுகையில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதே ஜனாதிபதியாக தனது பணி என்றும், இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கூடுதல் அழுத்தத்தையே தரும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

    • இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.

    இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×