என் மலர்
உலகம்

அமெரிக்க படைகள் முழு பலத்துடன் ஈரானை தாக்கும் - அதிபர் டிரம்ப்
- ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமரிக்கா மீது ஈரானின் எந்தவொரு பதிலடி தாக்குதலுக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஈரான் எந்த வகையிலும் எங்களைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப்படைகளின் முழு பலமும், வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு உங்கள் மீது பாயும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, ஈரான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. பரஸ்பர தாக்குதகள் தொடர்வதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற தனது அறிவுரையை கேட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதாவது, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் அற்புதமானது என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தையும், தெஹ்ரான் அருகே உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் தாக்கியது.
இதற்கிடையில், அமெரிக்கா உடனான ஆறாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்தது.
இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரான் குடியிருப்பு கட்டிடத்தைத் தாக்கியதில் 29 குழந்தைகள் உட்பட குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தொடர அச்சுறுத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்கள் கட்டுப்பாடுடன் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் "தெஹ்ரான் பற்றி எரியும்" என்று எச்சரித்துள்ளார். இந்த மோதல், பிராந்தியத்தில் ஒரு பெரிய போராக உருவெடுக்கும் அபாயம் குறித்து சர்வதேச கவலைகளை எழுப்பியுள்ளது.