என் மலர்tooltip icon

    கனடா

    • புதிய விதிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு.
    • எச்சரிக்கை வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கனடா நாட்டின் சுகாதார அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் கூறியதாவது:-

    புகையிலை பயன்பாடு கனடாவின் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இது, நோய் மற்றும் அகால மரணத்தைத் தடுக்கக்கூடிய நாட்டின் முன்னணி காரணமாகவும் அமைந்துள்ளது.

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகையிலைக்கு எதிராக எச்சரிக்கை வாசக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்து, உலகின் முதல் நாடாக கனடா திகழ்கிறது. 2035ம் ஆண்டிற்குள் புகையிலை நுகர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட வேண்டும் என்ற கனடாவின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும். புகையிலை தயாரிப்பு கட்டுகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் ஏப்ரல் 2024ம் ஆண்டு இறுதிக்குள் புதிய எச்சரிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். கிங் சைஸ் சிகரெட்டுகளில் ஜூலை 2024 இறுதிக்குள் தனிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வழக்கமான அளவிலான சிகரெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகள் ஏப்ரல் 2025 இறுதிக்குள் எச்சரிக்கை இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது.
    • காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.

    கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள் எரிந்துள்ளன.

    காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகமாகியுள்ளது. இது ஆறுகள், சிற்றோடைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. காட்டுத்தீ, வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்து கோவில் மீது கருப்பு மை பூசப்பட்டது.
    • வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    டொரண்டோ:

    வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், கடந்த ஜனவரி 16-ம் தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரியவந்தது. கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு உள்ளன. ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் ஜனவரி மாத இறுதியில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு காணப்பட்டன. இதற்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நிலைமை சற்று சீரானது.

    இந்நிலையில், கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்துக் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கோவிலின் வெளிப்புற சுவரின் மீது கருப்பு மை தெளித்து, இந்துவுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை வின்ட்சார் நகர போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சம்பவம் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் நடந்திருக்கக் கூடும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வெளியான வீடியோவில், முழுவதும் கருப்பு உடையில், முகங்களை மூடியபடி 2 பேர் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தொலைவில் நின்றபடி யாரேனும் வருகிறார்களா என கவனித்தபடி நிற்கிறார். மற்றொருவர் சுவற்றில் கருப்பு மை கொண்டு எழுதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.

    இந்து கோவில் அவமதிக்கப்பட்ட செயலுக்கு கனடாவில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • கனடாவில் இரண்டாவது முறையாக காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
    • இச்சம்பவத்திற்கு கனடா தூதரை தொடர்பு கொண்டு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒட்டோவா:

    பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலைக்கழக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது.

    இந்நிலையில், மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு கனடா நாட்டுத் தூதரை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த வாரம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் 6 அடி உயர மகாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியனர். அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி அட்டூழியம் செய்தனர்.

    • தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
    • மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

    அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.

    அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-

    நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
    • உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஒட்டாவா:

    கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிகாரிகள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறும்போது, 'உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

    இதுதொடர்பாக எட்மண்டன் போலீஸ் சங்கத்தின் மைக்கேல் எலியட் கூறும்போது, 'நகரின் வடக்கு மத்திய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியான இங்கிள்வுட் அருகே 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

    இந்த தருணத்தில் அவர்களின் குடும்பத்தினர் சக ஊழியர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் முழு சேவையும், சமூகமும் துக்கத்தில் உள்ளது' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
    • கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    ஓட்டாவா:

    கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கருவூல வாரிய தலைவர் மோனாபோர்டியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னனு சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கனடா நாட்டிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று (28-ந்தேதி ) முதல் அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தினால் அந்த செயலி அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது.
    • கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர்.

    இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் டுவிட்டரில் கூறும்போது, மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
    • இச்சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கனடா:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் தேதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது.

    இப்படி உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது. அமெரிக்க வான்பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கனடா நாட்டின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார்.
    • பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.

    டொரோண்டோ:

    கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார். அவரது பெயர் ஜூலியட். 18 வயது மாணவியான இவர் தனது பிறந்தநாளையொட்டி அங்குள்ள வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க தனது தாத்தாவுடன் சென்றார்.

    அப்போது அவர் தாத்தா அறிவுறுத்தலின்படி லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பின்னர் அவர் அந்த சீட்டுகளை வீட்டில் வைத்து விட்டு மறந்தே போனார். இந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரருக்கு லாட்டரியில் பரிசு விழுந்த விவரம் அவருக்கு தெரிய வந்தது. அப்போது தான் அவருக்கு தானும் அந்த லாட்டரியை வாங்கியது நினைவுக்கு வந்தது.

    உடனே அவர் தான் வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என பார்த்தார். அவரது அதிர்ஷ்டம் லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.290 கோடி பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஜூலியட் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கையும்,ஓடவில்லை். காலும் ஓடவில்லை. இதுபற்றி அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.

    • இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
    • கோவில் சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது.

    இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

    காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிராம்ப்டனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
    • மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஒட்டாவா:

    இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் 2 பேர் என 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ×