இந்தியர்களுக்கு எதிரான பேரணி: கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு

இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்தியர்களுக்கு எதிரான பேரணி: கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு
Published on

கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.

இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com