என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதியில் விஜய் போட்டியிட திட்டம்?
- மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
- வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.
ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.
மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.
த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.
2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.






