என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போர் வேண்டாம், புன்னகை வேண்டும்: கவிஞர் வைரமுத்து
- ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சென்னை:
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
இதோ
இன்னுமொரு
யுத்தம் தாங்குமா?
மண்டை உடைந்துவிடும்
மண்ணுருண்டை,
இஸ்ரேல் காசா
சாவுச் சத்தம் அடங்குவதற்குள்,
ரஷ்யா உக்ரைன்
ரத்தச் சகதி காய்வதற்குள்,
இஸ்ரேல் ஈரான்
தொடங்கிவிட்டது.
சொல்பேச்சுக் கேட்காத
இரு நாடுகளால்
உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன
அச்சத்தின் கடலலைகள்.
போர்ச் சங்கிலி என்பது
உலகைப் பிணைத்திருக்கிறது.
இஸ்ரேல் யுத்தம்
மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது.
ஈரான் யுத்தம்
ஈரோட்டின் மஞ்சளைக் கரியாக்குகிறது.
மில்லி மீட்டர்களில் ஏறும் பொருளாதாரம்,
மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது.
போர் வேண்டாம், புன்னகை வேண்டும்.
யுத்தமில்லாத பூமி -
ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
என பதிவிட்டுள்ளார்.






