என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அலைகடலென குவிந்த தொண்டர்கள்... விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி என்ன?
- நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
- அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதி அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி கடந்த 28-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் தரப்பில் பாதுகாப்பு தொடர்பாக 32 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு த.வெ.க தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டதால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து அய்யாசாமி பட்டி பிரிவு சாலையில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மைதானம் தயார் செய்யும் பணி தொடங்கியது. விழா நடைபெறும் இடத்தில் பூமி பூஜை நடந்து முடிந்தது. தொடர்ந்து பணிகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன.
நிர்வாகிகள், தொண்டர்கள் அமருவதற்காக மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்த 15 ஏக்கரில் இடம் தயார் செய்யப்பட்டது.
இந்த பணிகளை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 4,900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க கியூஆர் குறியீடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகமாக வர தொடங்கினார்கள். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் காரில் புறப்பட்டார். 8.55 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 9.40 மணிக்கு திருச்சி சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து வேனில் தஞ்சை அய்யாசாமிபட்டி பகுதிக்கு புறப்பட்டார்.
அப்போது விஜய்யை பார்ப்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர் . விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தனர்.

மேலும் வழி நெடுகிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். த.வெ.க.வின் சின்னமான விசில் ஊதி வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் விஜய் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். காரில் இருந்து இறங்கிய விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் பேசுவதற்காக அங்கு பிரசார பஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் பேசினார். இதனை தொடர்ந்து பிரசார பஸ்சில் ஏறி நின்றபடி விஜய் கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசப்போகிறார். அப்போது அவர் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






