என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலமைப்பு தான் உயர்ந்தது.. உச்சநீதிமன்றத்தை விமர்சித்த குடியரசு துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்
- பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது.
- இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" நிலவுகிறது
உச்சநீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழக்கில் மாநில ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்தது உச்சநீதிமன்றம். அதே தீர்ப்பில் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜெகதீப் தன்கர் பேச்சு
இது குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவர் நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது. இது நீதித்துறைக்கு இது 24x7 ஆக கிடைக்கிறது.
அரசமைப்பின் 145ஆவது பிரிவை (முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம்) விளக்குவதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று விமர்சித்தார்.
திமுக கண்டனம்
இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்பின் படி அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதன் கீழ், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. மூன்றும் அவற்றின் சொந்தத் துறைகளில் செயல்படும்போது அரசியலமைப்பு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.
ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பிரிவு 142 ஐப் பயன்படுத்தி, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






