என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய்க்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகல் - த.வெ.க.வுக்கு பின்னடைவா?
- பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன.
- ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன. தி.மு.க. "பென்" எனும் அமைப்பு மூலம் கள ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருகிறது.
இது தவிர ஐபேக் மற்றும் ராபின்சர்மா தலைமையிலான இரு குழுக்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கள ஆய்வை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
அ.தி.மு.க.வும் சர்வந்த் தேவபக்தினி மற்றும் ஹரி கசவுல்யா ஆகியோர் கொண்ட குழு மூலம் 234 தொகுதிகளிலும் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த குழு அ.தி.மு.க.வுக்காக 200 பேரை களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு முதல் 11 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் இந்த குழுவின் ஆய்வுகள் மற்றும் வகுத்து கொடுத்த வியூகங்கள் வெற்றி தேடி கொடுத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தல் வியூகத்துக்காக குழு வைத்து இருப்பது போல புதியதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக சேர்த்துக் கொண்டார். சமீபத்தில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் விஜய்க்காக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வந்தது. பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அந்த மாநில தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளார்.
ஜன் சுராஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனவே தமிழகத்தில் விஜய்க்காக முழுமையாக செயல்படாத நிலையில் அவர் உள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் வரை அவர் பீகார் அரசியலில் கவனம் செலுத்துவார் என்று தெரிய வந்துள்ளது. எனவே விஜய்க்காக ஆலோசனை வழங்கும் பணிகளில் இருந்து அவர் தற்காலிகமாக விலகி உள்ளார்.
நவம்பர் மாதத்துக்கு பிறகு அவர் மீண்டும் விஜய்க்கு ஆலோசனை வழங்க வருவார் என்று தெரிகிறது.