என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'விஜய் போன்ற அற்ப அரசியலை செய்யவில்லை' - ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி
- கொரோனா தொற்றால் அரசியலில் இருந்து விலகினார்.
- கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது.
நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்ற வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
"ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே... கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிரூபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்...
பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" எனக் குறிப்பிட்டுள்ளார்.






