என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"கட்டுப்பாடின்றி 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் பயனில்லை" - தவெகவை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி!
- இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை.
- திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது
திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நம் எதிரிகளை சுக்குநூறாக்க கூட்டப்பட்ட கூட்டம், நம் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி.
கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற இந்த கொள்கை கூட்டம் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரு பலம் என என்னால் உறுதியாக கூறமுடியும். மற்ற கட்சிகளில் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் இருப்பர். ஆனால் திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது." என தெரிவித்தார்.






