என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் கரூர் செல்ல ஏற்பாடு:  புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு
    X

    விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு

    • அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது.
    • கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்றிரவு கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார்.

    கரூரில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.

    மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

    கரூர் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    கட்சி நடவடிக்கைகள் அனைத்திலும் விஜய் உத்தரவின் பேரில் புஸ்ஸி ஆனந்த் இரவு பகலாக ஈடுபட்டு த.வெ.க. தொண்டர்களை ஊக்கப்படுத்தி வந்தார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் த.வெ.க. கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

    இதையடுத்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

    கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டு இருந்தார்.

    கரூர் செல்வதற்கு முறைப்படி அனுமதி கேட்டு போலீசாரிடம் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு குறித்து விஜய் ஆலோசனையின் பேரில் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதனிடையே கரூரில் 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு த.வெ.க. தலைவர் விஜய் மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்றிரவு கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு த.வெ.க.வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் இன்றும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கரூர் செல்ல உள்ள நிலையில் வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை த.வெ.க. தலைவர் விஜய் அமைத்துள்ளார் 41 குடும்பங்களையும் தனித்தனியாக சந்திக்காமல் திருமண மண்டபம் போன்ற இடத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×