என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவை பாலியல் சம்பவத்தில் கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகளா?- நயினார் நாகேந்திரன் கேள்வி
- பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு துளியும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.
கோவை மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆணும், பெண்ணும் தனியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் அந்த ஆணை அறிவாளால் வெட்டிவிட்டு அந்த பெண்ணை இழுத்துப்போய் முள் புதருக்குள் கூட்டிச் சென்று விடியற்காலை 4 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
காவல்துறை என்ன செய்துக் கொண்டிருந்தது? காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது.
உடனடியாக கோவைக்கு சென்று போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பல்லடத்தில் மூன்று பேரை வெட்டிக் கொல்கிறார்கள்.
தொடர்ந்து கொலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், இதுபோன்ற கொலை சம்பவங்களின்போது பெயருக்கு இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு 4 பேரை கைது செய்கின்றனர். வெளியில் இருப்பவன் 17 கொலைகள் நான்தான் செய்தேன் என்கிறான். அப்போ கைது செய்து சிறையில் இருப்பவன் உண்மை குற்றவாளியா ? இல்லையா? என்கிற சந்தேகம் எழுகிறது.
இதேபோல், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் உடனடியாக 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் உண்மையான குற்றவாளியா? இல்லையா ? என்பது தெரியாது?
இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்கு கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






