முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று கூறிய அமித்ஷா... எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும்.யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று கூறிய அமித்ஷா... எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?
Published on

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும் என்றார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

முதலமைச்சர் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா குறிப்பிடாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்கனவே உட்கட்சி மோதல்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமித்ஷா கூறியிருப்பது, யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்படி, பா.ஜ.க. கூட்டணியை இன்னும் முழுமையாக எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததால் அவர் மீது அமித்ஷா அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் முதலமைச்சர் வேட்பாளராக செங்கோட்டையன், எஸ்.வி.வேலுமணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தனியாக டெல்லிக்கு சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். இதனால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

அமித்ஷா கூறியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த மாதிரியான கருத்தை தெரிவிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com