search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி மதுரையில் ஆலோசனை
    X

    தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி மதுரையில் ஆலோசனை

    • தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார்.
    • நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன.

    இந்த 2 அணிகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி புதிய கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது.

    தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ப்பதற்கும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பா.ஜனதா கூட்டணி இறுதி செய்யப்பட இருக்கிறது.

    மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிர களப்பணியில் இறங்கி உள்ளது.

    வடமாநிலங்களில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்த முறை தென் மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறி வைத்து பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

    இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

    தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார். இதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வைத்து பா.ஜனதா தமிழக தலைவர்கள் மற்றும் டெல்லியில் இருந்து வருகை தரும் மேலிட தலைவர்கள் ஆகியோருடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை முக்கிய பிரமுகர்கள் பலரும், கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர்.

    பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகை தருகிறார்.

    பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.


    பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 3.50 மணிக்கு பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்கிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார். அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது அவர்களுடனும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

    மறுநாள் 28-ந் தேதி காலை 8.15 மணிக்கு பிரதமர் ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    8.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 9 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறார்.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் சில திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.



    மேலும் ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகள் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.

    விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார்.

    நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.

    பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் வருகையால் தமிழக பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். நெல்லை மற்றும் பல்லடத்தில் பிரதமர் பேச உள்ள பொதுக்கூட்டங்களில் லட்சக்கணக்கானோரை திரட்டி பலத்தை காட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பிரதமரின் தமிழக சுற்றுப் பயணத்தால் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    Next Story
    ×