search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தோற்றால்... மாவட்ட செயலாளர்களுக்கு செக்
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தோற்றால்... மாவட்ட செயலாளர்களுக்கு செக்

    • விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும்.
    • வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினர்.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்களும், 234 தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசிய சில தகவல்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரிபார்க்க வேண்டும்.

    விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பணி நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஆகவே அனைவரும் தேர்தலுக்காக விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

    தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். தொகுதி நிலவரத்தை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்.

    வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முக்கிய மாவட்டச் செயலாளர்களின் கருத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

    தேர்தலில் மாவட்டச் செயலாளர்களின் பணி மிக முக்கியமானது. எந்த தொகுதியில் பிரச்சனை நடந்தாலும் அதை மாவட்டச் செயலாளர் சரி செய்ய வேண்டும். தினமும் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்த முறை 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்திய அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும்.

    எனவே அதற்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கடுமையாக பாடுபட வேண்டும். தேர்தலில் நமது வேட்பாளர் யாரேனும் தோல்வி அடைய நேரிட்டால் அதற்கு மாவட்டச் செயலாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விசயத்தில் தயவு தாட்சண்யமின்றி மாவட்டச் செயலாளரை நீக்கவும் தயங்க மாட்டேன்.

    இந்த தேர்தலில் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள பார்வையாளர்கள் புதியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

    தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் பற்றி புகார் வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு மாற்றப்படுவார்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து பேசினார்.

    Next Story
    ×